வியாழன், 7 செப்டம்பர், 2017

21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடையாது அதிகாரபூர்வ அறிவிப்பு - பெரும்பான்மையை இழந்த எடப்பாடி அணியில் 114

Mathi : Oneindia Tamil சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை 21 எம்.எல்.ஏக்கள் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 114 ஆக குறைந்தது. தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியே கடிதம் கொடுத்தனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள். ஆனால் முதலில் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் 116 எம்.எல்.ஏக்கள்தான் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தனர். இந்நிலையில் அந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கம்பம் ஜக்கையன் இன்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பதாக அறிவித்தார். இதையடுத்து தினகரன் அணியின் எண்ணிக்கை 18 ஆனது.
இதனிடையே கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனடிப்படையில் தினகரன் அணியில் அதிகாரப்பூர்வமாக 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 114 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர்.


ஆனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 109 எம்.எல்.ஏக்கள்தான் கலந்து கொண்டனர். வேறு சில பணிகளால் எஞ்சிய எம்.எல்.ஏக்கள் வரவில்லை என முதல்வர் எடப்பாடியார் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: