சனி, 9 செப்டம்பர், 2017

தமிழிசை : நடிகர் சூர்யாவுக்கு நீட் பற்றி என்ன தெரியும்?


கார்த்திக்.சி நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றுவருகின்றனர். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக அமைதி வழியில் போராடலாம். சட்டம், ஒழுங்கை மாநில அரசு காக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ‘நீட் தேர்வுஎன்றால் என்னவென்று தெரியாத 6-ம் வகுப்பு மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்துக்குத் தூண்டிவிடுகின்றனர். மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும். நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? சூர்யா போன்றோர் கோடிக்காகப் பணியாற்றும்போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம். நீட் தேர்வு கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: