புதன், 6 செப்டம்பர், 2017

எடப்பாடியின் கூட்டத்துக்கு வராத 28 எம்.எல்.ஏக்கள்!

எடப்பாடியின் “எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது என்ற அழைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எல்லோருக்கும் போனது. குறிப்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கச் சொல்லியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. மொத்தமுள்ள 133 எம்.எல்.ஏ.க்களுக்கும், அதாவது தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்துதான் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இன்றைய கூட்டத்துக்கு 28 பேர் வரவில்லை. கூட்டத்துக்கு முதலில் வந்து அமர்ந்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 104. கூட்டம் முடியும் தறுவாயில் பெண் எம்.எல்.ஏ. ஒருவரை சிலர் அழைத்து வந்து மினிட் புத்தகத்தில் கையெழுத்துப் போடவைத்தனர். ஆக மொத்தம் 105 எம்.எல்.ஏ.க்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் துணை முதல்வரான பன்னீர்செல்வம் பேசும்போது, “போன தடவை நாம கூட்டம் நடத்தியபோது வராதவங்க எல்லாம் இப்போ வந்துட்டாங்க. இன்னும் வருவாங்க. காரணம், அம்மாவின் ஆன்மா நம்மோடுதான் இருக்கு. நம்மைத்தான் வழி நடத்திட்டு இருக்கு. அது இப்போதான் எம்.எல்.ஏ.க்களுக்குப் புரிய ஆரம்பிச்சிருக்கு. அங்கே போனவங்க எல்லாம் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு போனவங்க இல்லை. ஏதோ சில லாபத்துக்காக போனவங்க. எல்லோருமே வந்துடுவாங்க. இப்போ நீங்க எல்லோரும் இங்கே வந்ததுல எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி!” என்று சொல்லியிருக்கிறார்.
திண்டுக்கல் சீனிவாசனும் பேசியிருக்கிறார். “நம்ம கட்சிக்குள் முடிவெடுக்கும் அதிகாரம் இன்னும் யாருக்கும் இல்லை என்பதால்தான் நிறைய பிரச்னைகள் வருது. அதனால் இனி முடிவெடுக்கும் அதிகாரத்தை முழுமையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இனி கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் பழனிசாமி எடுப்பார்” என அவர் அறிவித்திருக்கிறார்.
நிகழ்ச்சியில் இறுதியாக முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறார். “பொதுக்குழு கூட்டத்துக்கான நாள் நெருங்கிட்டு இருக்கு. அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு உங்க எல்லோருடைய ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. இது அம்மா ஆட்சி. அதை வழிநடத்தும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கு. எந்தக் காரணத்துக்காகவும் நம் பொறுப்பிலிருந்து விலகிடக் கூடாது. அங்கே இவ்வளவு பேரு இருக்காங்களே... ஆட்சி கவிழ்ந்துடுமோ என்றெல்லாம் யாரும் நினைக்காதீங்க. அப்படியான ஒரு சூழல் நிச்சயம் வராது. டெல்லியில் இருந்து என்னோடு பேசிட்டாங்க. மிச்சம் இருக்கும் ஆட்களும் சீக்கிரமே இங்கே வந்துடுவாங்க. அப்படியே வராமல் இருந்தாலும், ஆட்சிக்கு எதிராக அவங்க வாக்களிக்க மாட்டாங்க. அவங்களுக்கு கோபத்தை எப்படி காட்டுறதுன்னு தெரியலை. அதனாலதான் ஆட்சி வேணும், கட்சி வேணும். ஆனால் பழனிசாமி வேண்டாம் என்பதுதான் அவங்க முழக்கமாக இருக்கு. அதெல்லாம் சரியாகிடும். தோழமைக் கட்சியில் இருக்கும் 3 பேரும், எந்தச் சூழ்நிலையிலும் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என்பதை தெளிவாக சொல்லிட்டாங்க. அதனால இனியும் நாம தினகரனுக்கு பயப்படத் தேவையில்லை. அங்கே இருப்பவர்களிடம் இப்போ நான் சொன்னால், 9 பேர் வர ரெடியா இருக்காங்க. அவங்களுக்குத்தான் இங்கே ஸ்லீப்பர் செல்ஸ் இருப்பாங்களா... நமக்கு இருக்க மாட்டாங்களா? நம்ம ஸ்லீப்பர் செல்ஸ் உள்ளே இருக்காங்க. அவங்களும் தேவைப்படும் நேரத்துல வருவாங்க...” என்று முதல்வர் பேசி முடிக்கும்போது, அனைவருமே பலத்த கைத்தட்டலை எழுப்பியிருக்கிறார்கள். இப்படியாகத்தான் இன்றைய எம்.எல்.ஏ. கூட்டம் முடிந்தது” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து கேள்வி ஒன்றைப் போட்டது. “மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடந்ததே... அதில் என்ன பேசினார்கள்?”
பதிலை அடுத்த மெசேஜில் டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த கையோடு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. 50 மாவட்டச் செயலாளர்களில் தஞ்சை வடக்கு ரெங்கசாமி, தேனி தங்க தமிழ்செல்வன், சென்னை தெற்கு கலைராஜன், வட சென்னை வடக்கு வெற்றிவேல் என, தினகரன் ஆதரவு நிலைப்பாடுள்ள 5 மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. ‘முடிவெடுக்கும் அதிகாரத்தை முழுமையாக எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கலாம்னு நாம ஏற்கெனவே பேசினோம். அதைத்தான் திரும்பவும் சொல்றேன். அந்த அதிகாரத்தை முதல்வருக்கு கொடுக்குறோம். பொதுக்குழுவுல சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்குவது என்ற முடிவுக்கு நீங்க எல்லோரும் கட்டுப்படணும். நாமதான் மெஜாரிட்டியா இருக்கோம். இப்படியே விட்டுட்டா அவங்க கட்சியை கூறுபோட்டு வித்துடுவாங்க.. உங்க ஒத்துழைப்பு எல்லாம் தேவை..’ என திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார். மாவட்டச் செயலாளர்கள் எல்லோருமே அதற்குத் தலையாட்டியிருக்கிறார்கள்.
12ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தைப் பொறுத்தவரை பெரிய அளவு எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என எடப்பாடி தரப்பில் நினைக்கிறார்கள். அதற்கு இப்போதுள்ள எம்.எல்.ஏ.க்களோ, மாவட்டச் செயலாளர்களோ எதிர்ப்புக் காட்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதை உறுதிப்படுத்த இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: