சனி, 9 செப்டம்பர், 2017

A.R.Rahman :இது என்னுடைய இந்தியா அல்ல!

இது என்னுடைய இந்தியா அல்ல!
minnambalam: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மறைவு குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் மறைவு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘இது என்னுடைய இந்தியா அல்ல’ எனக் காட்டமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர், லங்கேஷ் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். இடது சாரி சிந்தனையாளரான இவர், தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் சில இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து, ‘ஒன் ஹார்ட்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “இந்தச் சம்பவத்தால் நான் வேதனை அடைந்துள்ளேன். இதுபோன்ற செயல்கள் இந்தியாவில் நடப்பதில்லை. இது என்னுடைய இந்தியா அல்ல... முற்போக்கான கருணையுள்ள இந்தியாவைத்தான் நான் காண விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் தனது படம் குறித்து தெரிவித்துள்ள அவர், “இந்தப் படம் எனது 25 வருட இசைப் பயணத்தில் நான் கடந்து வந்த பாதை, ஏறிய மேடைகள், என்னுடன் பணியாற்றிய இசைக்குழு பற்றிய படம். எனது இசையைப் பின்பற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக இருக்கும். இந்தத் திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தும் ‘ஒன் ஹார்ட்’ தொண்டு நிறுவனத்துக்கு அளிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
‘உங்களுடைய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்குமா?’ என்ற கேள்விக்கு, “நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். எனது வாழ்க்கையைப் பற்றிய படம் இப்போதைக்குத் தேவை இல்லை. எனது மறைவுக்குப் பிறகு யாராவது உருவாக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: