சனி, 9 செப்டம்பர், 2017

BBC:3 லட்சம் ரோஹிஞ்சா அகதிகள் வங்கதேசத்துக்குள்

மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
மியான்மரில் இருந்து தப்பித்து வங்கதேசத்தை அடைய ரோஹிஞ்சா முஸ்லிம்களின் குடும்பங்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். >கடந்த வியாழக்கிழமை வரை 164,000 ஆக இருந்த எண்ணிக்கையானது, மேலும் பல பகுதிகளில் அந்த மக்கள் வந்து சேர்ந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதிகரித்துள்ளதாக பெண் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சூழ்நிலை "மிகவும் அச்சமூட்டுவதாக" கூறும் அவர், மியான்மரில் நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளார்.
தங்கள் கிராமங்களை தீ வைத்துக் கொளுத்தும் மியான்மர் ராணுவத்தினர், தங்களையும் தாக்குவதால்தான் நாட்டை விட்டு தப்பிச் செல்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மியான்மரின் வடக்கே உள்ள ரகைன் மாநிலத்தில் காவல் சாவடியை ரோஹிஞ்சாக்கள் தாக்கியதால் இந்த வன்முறை வெடித்தது.
புத்தமதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில், நாடற்ற, பெரும்பாலும் முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிஞ்சாக்கள், தங்களை ராணுவம் மற்றும் பௌத்தர்கள் மோசமான முறையில் நடத்துவதாக கூறுகிறார்கள். இக்குற்றச்சாட்டை மறுக்கும் மியான்மர் அரசு, தனது ராணுவம் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களை மட்டுமே தாக்குவதாக தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக, ரோஹிஞ்சாக்கள் குடும்பம் குடும்பமாக வங்கதேசம் செல்வதற்காக வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
வங்கதேசத்துக்குள் வந்துள்ள ரோஷிஞ்சாக்களின் எண்ணிக்கையானது "கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக வந்தவர்களால் உயர்ந்து விடவில்லை என்றும், இதுவரை அறியப்படாத பல்வேறு பகுதிகளில் மக்கள் வந்துள்ளது தற்போதுதான் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும் அதனால், இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும்" ஐநா அகதிகள் முகமையை சேர்ந்த பெண் செய்தித்தொடர்பாளர் விவியன் டான் தெரிவித்துள்ளார்.


தற்போதுள்ள அதிகள் முகாம்கள் நிரம்பிவிட்டதாகவும் மற்றும் எல்லையை கடந்துவிட்ட "மக்கள் சாலைகள் அல்லது காலியாக உள்ள இடங்கள் அனைத்திலும் கூடாரத்தை அமைத்துவிடுவதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் "சோர்வுடனும், பசியுடனும் உள்ளனர். தங்குவதற்கு ஏதாவது இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில்" உள்ளதாக ஐ.நாவின் அகதிகள் முகமையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மர் மற்றும் வங்கதேச எல்லையாக உள்ள நப் ஏரியை நோக்கி சிலரும் மற்றவர்கள் கடல் மார்க்கமாகவும் செல்கின்றனர். கடந்த புதன்கிழமையன்று வங்கதேசத்தின் காஸ் பஜார் என்னும் இடத்தில் மட்டும் குறைந்தது 300 படகுகள் வந்திருக்கலாம் என்று ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

ரோஹிஞ்சா மக்கள் இடம்பெயரக் காரணம் என்ன ரோஹிஞ்சாக்களின் இந்த அவல நிலையானது பல்வேறு நாடுகளில் கவனத்தையும், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுக்க செய்துள்ளது. இந்நிலையை கையாளத் தவறியதாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சு சி, விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இனவெறிக்கெதிராக போராடிய தென் ஆப்பிரிக்காவின் டெஸ்மோண்ட் டூடு கடந்த வியாழக்கிழமை இதுகுறித்து கூறும்போது, "மியான்மரின் மிக உயர்ந்த பதவியை அடைவதற்கு நீங்கள் கொடுக்கும் அரசியல் விலை உங்களது மெளனம்தான் என்றால், அந்த விலை கண்டிப்பாக உச்சபட்சமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி பல்வேறு ஆண்டுகள் வீட்டு சிறையில் இருந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆங் சான் சூ சியை "மக்களின் நீதிக்காகவும், மனித உரிமைகள் மற்றும் உங்கள் மக்களின் ஒற்றுமைக்காகவும் குரல் கொடுங்கள்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவருக்கு அளிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவரும் சூழ்நிலையில், அது சாத்தியமில்லை என்று நோபல் குழுவின் தலைவர் ரெய்ஸ்-ஆண்டர்சென் தெரிவித்துள்ளார்.
"மியான்மரின் சுதந்திர போராட்ட வீரர் என்ற வகையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் மற்றும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதற்காகவும்" நோபல் பரிசை சூ சி வென்றார் என நார்வே வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்."இதுகுறித்த எந்த ஆணையோ, அல்லது நோபல் பரிசு பெற்றவர்கள் அதற்கு பிறகு செய்யும் செயலை மதிப்பீடு செய்வதோ எங்களின் வேலையில்லை" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மரில் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக செயல்படுவதாக கடுமையாக சாடப்படும் ஆங் சான் சூ சி, இதுகுறித்து இந்த வாரத்தின் தொடக்கத்தில் கூறும்போது, ரகைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிக்கு அங்கு "பரப்பப்பட்ட தவறான தகவலே காரணம்" என்று தெரிவித்துள்ளார்.
ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் மற்றும் முஸ்லிம்களும் தங்களின் வீடுகளை எரித்துவிட்டு, முஸ்லிம் அல்லாதோரை தாக்குவதாக சூ சியின் அரசாங்கம் கூறியுள்ளது.
ஆனால், அரசாங்கத்தின் தகவல்களுக்கு முரணாக, ரகைன் மாநிலத்தில் உள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை ஒரு முஸ்லிம் கிராமம் அங்குள்ள ரகைன் பெளத்த குழுவினரால் எரிக்கப்படுவதை நேரில் பார்த்துள்ளார். பிபிசியிடம் பேசிய மியான்மர் நாட்டின் மறுகுடியேற்றத்திற்கான அமைச்சர் வின் மியாட் ஆவ், மியான்மரில் வசித்ததற்கான சான்று அல்லது குடியுரிமை உள்ள, வங்கதேசம் சென்ற ரோஹிஞ்சாக்கள் மியான்மர் திரும்பி வர அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதால் மிகவும் சொற்பமானவர்களே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாடு திரும்ப முடியும்.
நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் தங்கள் ஆயுத வல்லுனர்களின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, வங்கதேச எல்லையில் மியான்மர் ராணுவம் கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.
இந்த வெடிகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார், இரண்டு குழந்தைகள் உள்பட மூவர் காயமடைந்துள்ளனர். ரோஹிஞ்சாக்கள் மீண்டும் மியான்மருக்குள் நுழையாமல் இருக்க இவ்வாறு செய்வதாக வங்கதேச அதிகாரிகளும் ஏற்கனவே கூறியிருந்தனர்.

கருத்துகள் இல்லை: