வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கிருஷ்ணசாமி அவதூறு பரப்புகிறார்: அனிதாவின் சகோதரர்!

மின்னம்பலம் :  எங்களின் குடும்பத்தில் நடந்தது தெரியாமல், எங்களுக்கு உதவி
செய்தவர்கள்மீது புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அவதூறு பரப்புவதாக அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.
மாநிலப் பாடத்திட்டத்தின்படி தான் மருத்துவம் படிக்க அனைத்து தகுதிகள் இருந்தும், நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவப் படிப்பு கனவு கலைந்துபோனதால், வேதனையடைந்த மாணவி அனிதா கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், தமிழ் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்க, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மட்டும், மாணவியின் மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளார். மேலும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் மீதும், பிரின்ஸ் கஜேந்திரபாபுவையும் அவதூறாக பேசி வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் அரியலூர் மாவட்டம் குழுமூரில் நேற்று (செப்டம்பர் 7) செய்தியாளர்களிடம் பேசிய மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், “எங்கள் வீட்டில் நடந்தது என்ன என்பதை கிருஷ்ணசாமி நேரில் பார்த்தது கிடையாது. அவர் உண்மை நிலவரம் தெரியாமல் பேசக்கூடாது. அனிதா ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து படித்ததாக உண்மை நிலவரம் தெரியாமல் அவர் பேசி வருகிறார். எங்களுக்கு உதவி செய்த எஸ்.எஸ்.சிவசங்கர், பிரின்ஸ் கஜேந்திரபாபு மீது அவர் அவதூறு பரப்பி வருகிறார். தயவுசெய்து அவர் அவ்வாறு அவதூறு பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: