வியாழன், 8 ஜூன், 2017

எடப்பாடி - பன்னீர் சமரசம்? புதிய புரிந்துணர்வு தயார்!

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே புதிய சமரச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. இணைப்பு முயற்சியில் அதிரடி மாற்றங்கள்: ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே புதிய சமரச திட்டம் சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால் கட்சியும், ஆட்சியும் அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டு கட்சி பெயரை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. சின்னத்தை மீட்க அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா சிறை சென்ற பின்னர் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ். அணி டி.டி.வி.தினகரனை கட்சிப் பணியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனை விதித்தது. அதன்படி தின ரன் கட்சிப் பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அதன்பிறகு தினகரன் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.


 40 நாட்களுக்கு பின்பு விடுதலையாகி வந்த அவர் இணைப்பு முயற்சி நடக்காததால் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடுவேன் என்று அதிரடியாக அறிவித்தார். இது அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் கட்சிப்பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட முடிவில் மாற்றம் இல்லை என்று ஜெயக்குமார் மீண்டும் பதிலடி கொடுத்தார். இதனால் மீண்டும் அ.தி.மு.க.வில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அ.தி.மு.க. இணைப்பு முயற்சியும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இரு அணி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் ரகசியமாக பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 6 சுற்று பேச்சுகள் நடைபெற்றதாகவும் தங்கள் நிபந்தனை தொடர்பான எடப்பாடி பழனிசாமி அணியின் இறுதி முடிவை எதிர்பார்த்து இருப்பதாக ஓ.பி.எஸ். அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக புதிய சமரச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஓராண்டுக்கு முதல்- அமைச்சராக நீடிப்பார், ஓ.பன்னீர்செல்வம் பொது செயலாளராக செயல்படுவார் என்பதே அந்த திட்டம். சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார், ஆனால் கட்சியில் சாதாரண உறுப்பினராக நீடிக்கலாம் என்றும் டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக இடையில் நியமிக்கப்பட்டதால் அவரை அந்த பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

சசிகலா எடுத்த நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நிலையான ஆட்சி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. எனவே தான் ஓ.பி.எஸ். அணியின் நிபந்தனையை ஏற்று இணைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், இந்த இரு நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் எந்த நேரத்திலும் அ.தி.மு.க. அணிகள் இணையும், அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று சென்னையில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: