வெள்ளி, 9 ஜூன், 2017

சித்த, ஆயுர்வேதம், யோகாவுக்கும் நீட் தேர்வு: மத்திய இணை மந்திரி தகவல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளைத் தொடர்ந்து சித்தா, ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யோகாவுக்கும் வருகிறது நீட் தேர்வு: மத்திய இணை மந்திரி தகவல் புதுடெல்லி: மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய அளவிலான தேர்வு என்று கூறிவிட்டு, மாறுபட்ட வினாத்தாள் இருந்ததால், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் ஆயுஷ் துறைகளில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்படுகிறது.


மாணவர் சேர்க்கை நடைமுறைகளை தரப்படுத்துவதுடன், தகுதியுள்ள மாணவர்களை ஆயுஷ்-க்கு வரவழைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் யஸோ நாயக் கூறியதாவது:- ஆயுர்வேத, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகள் மற்றும் யோகா ஆகியவற்றின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளது.

 அந்த துறை சார்ந்த படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, இந்த பிரிவுகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். அடுத்த ஆண்டு முதல் சித்தா ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படும். இதேபோல் யோகா, இயற்கை முறை சிகிச்சை போன்ற படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலமாகவே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.மாலைமலர்

கருத்துகள் இல்லை: