திங்கள், 5 ஜூன், 2017

இணையவே முடியாத அளவு அதிமுகவில் பிளவு .. கமிஷன் பேரம் அந்த அளவு அதிகம் .. ஆட்சி அம்போ?

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக இருந்த ஓபிஎஸ்-சிடமிருந்து பதவி பறிக்கப்பட்டவுடன் அந்த இழப்பை தாங்க முடியாத ஓபிஎஸ் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து கட்சியிலிருந்து பிரிந்தார். அவருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ-க்களும் கட்சி நிர்வாகிகளும் வந்தனர். அந்த நிலையில், அதிமுக பிளவு, பரஸ்பர குற்றச்சாட்டு, கூவத்தூர் கலாட்டா, நம்பிக்கை வாக்கெடுப்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது, இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது, அமைச்சர் வீட்டில் ரெய்டு என தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தினகரன் சிறைக்கு சென்ற பிறகு அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதுவும் முடிந்தவுடன் தமிழகத்தில் பெரிய அளவில் அரசியல் களம் சூடுபிடிக்கவில்லை.


மத்திய பாஜக அரசுதான், மாடுகள் விற்பனை தடை என்ற உத்தரவின் மூலம் பரபரப்பை கிளப்பி அந்த குறையை தீர்த்துவைத்தது. இந்நிலையில், அதிமுக அணிகள் இணைவது போல தெரியவில்லை; ஆட்சி நீடிப்பதற்காகவும் கட்சியின் நலனுக்காகவும் தொடர்ந்து கட்சி பணி ஆற்றுவேன் என தினகரன் அதிரடியாக தெரிவித்தார்.

இதனால் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கழற்றிவிட்டு ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தலாம் என நினைத்தவர்களுக்கு தினகரனின் இந்த தகவல் பேரிடியாக விழுந்தது. இதையடுத்து தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், இன்பத்துரை உள்ளிட்டோருடன் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார்.
ஏற்கனவே வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், இன்பத்துரை ஆகியோர் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என முதல்வரை மிரட்டி வந்தனர். இந்நிலையில், அவர்களை வைத்து ஆட்சியைக் கலைத்து விடுவதாக மிரட்டி தன் கட்டுப்பாட்டில் அமைச்சர்களை வைத்துக் கொள்ள தினகரன் முயற்சி செய்யலாம் என கருதப்படுகிறது.

 இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் கூட்டாக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசி வருகின்றனர். தினகரனின் மிரட்டலை மீறி ஆட்சியை எப்படி வழிநடத்துவது, தினகரன் கோஷ்டியின் மிரட்டலை கையாள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லவ்டே

கருத்துகள் இல்லை: