வெள்ளி, 9 ஜூன், 2017

திருமுருகன் விடுதலைக்காக யாழ்ப்பாணத்தில் ஆர்பாட்டம்!

மின்னம்பலம் : தமிழ்நாட்டின் மெரினா கடற்கரையில் 2௦௦9 போரில் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நடத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நால்வரும் குண்டர் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்றால் அவரகள் மீது பல வழக்குகள் இருக்க வேண்டும். அவர்கள் மத்திய அரசு அலுவலகங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது போடப்பட்ட வழக்குகளை எல்லாம் சேர்த்து குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தமிழகத்தில் பரவலாக இந்த கைதுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் யாழ்ப்பாணத்திலும் சுவிட்சர்லாந்திலும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி... ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். ஜூன் 8 ஆம் தேதி இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் கூடி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.

அப்போது, ‘’தமிழக அரசே தமிழக அரசே திருமுருகன் காந்தியையும் அவரது தோழர்களையும் விடுதலை செய். காந்திய தேசமே காந்திய தேசமே... பாரத தேசமே பாரத தேசமே... ஜெனிவா வரை சென்று போராடிய போராளிகளை விடுதலை செய்... தமிழ் உணர்வாளர்களை, அஹிம்சாவதிகளை விடுதலை செய்.... காந்திய தேசமே காந்திக்கே சிறையா?” என்று முழக்கமிட்டார்கள். அவர்கள் கைகளில்... ‘நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா?’ என்று எழுதி இருந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
முன்னதாக ஜூன் 2 ஆம் தேதி சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் நகரில் இந்திய தூதரகம் முன்பு சுவிட்சர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்கள் ஒன்று கூடி திருமுருகன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது இந்திய தூதரகத்தின் உள்ளே இருந்துகொண்டு தூதரக அதிகாரிகள் போராட்டம் நடத்துபவர்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை: