புதன், 7 ஜூன், 2017

மாபா பாண்டியராஜன் : அ.தி.மு.க.அணிகள் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு .. வேற வழி?


நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் அ.தி.மு.க.வில் 2 அணிகளும் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று பாண்டியராஜன் கூறியுள்ளார்.கடந்த இரண்டு நாட்களாக அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரனை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து வருகின்றனர். தினகரனுக்கு சுமார் 31 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . தினகரனை எம்எல்ஏக்கள் சந்தித்து வரும் நிலையில் மற்றொரு புறம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ரீதியாக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து வருகிறார். இதனால் அ.தி.மு.க-வில் குழப்பமானது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

கேள்வி:- டி.டி.வி.தினகரனுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அரசு மெஜாரிட்டி இழந்து நிற்கிறது. அரசுக்கு ஆபத்து வந்தால் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- 29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை பார்த்தார்கள் என்பதால், அவர்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்றோ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் என்றோ கருதமுடியாது. டி.டி.வி.தினகரனை பார்த்த எம்.எல்.ஏ.க்கள் அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். எனவே இந்த அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை.

எங்களை பொறுத்தவரை 2 நிபந்தனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அதாவது சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டும். மற்றொன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதுதான். இந்த நிபந்தனைகளை எளிதில் நிறைவேற்றும் காலம் தற்போது நெருங்கிவிட்டது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணிகளும் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை: