ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ஆம் ஆத்மி முன்னாள் மந்திரி போலீசில் சரண்..ஆபாச சி.டி. விவகாரத்தில் கற்பழிப்பு வழக்கு..

புதுடெல்லி, ஆம் ஆத்மி முன்னாள் மந்திரி சந்தீப் குமார் மயக்க மருந்து கொடுத்து தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் ஆபாச சி.டி. விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது>ஆபாச சி.டி.க்கள்< டெல்லி ஆம் ஆத்மி அரசில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்தவர் சந்தீப் குமார். சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின.


சந்தீப்குமாரின் இந்த செயலால் அதிருப்தியடைந்த கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால், அவரது மந்திரி பதவியை பறித்து நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சந்தீப்குமார் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெண் புகார்

இந்தநிலையில் அந்த ஆபாச சி.டி.யில் இடம் பெற்றிருந்த இரு பெண்களில் ஒருவர் நேற்று பிற்பகல் சந்தீப் குமாருக்கு எதிராக டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அவர் தனது புகார் மனுவில், ‘ரேசன் கார்டு பெறுவதற்காக நான் சந்தீப் குமாரின் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது என்னை தனது அறைக்கு அழைத்து சென்ற சந்தீப் குமார், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை கற்பழித்து விட்டார்’ என்று கூறியிருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ பதிவுகள் ஓராண்டுக்கு முன்னர்தான் எடுத்ததாகவும், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது அல்ல எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

கற்பழிப்பு வழக்கு

இந்த புகாரின் பேரில் சந்தீப் குமார் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

தனக்கு எதிராக பெண் அளித்த புகாரின் பேரில் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதை அறிந்ததும், ரோகினியில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மாலையில் நேரில் சென்று போலீசார் முன்னிலையில் சந்தீப் குமார் சரணடைந்தார்.

கெஜ்ரிவால் அதிர்ச்சி

முன்னதாக சந்தீப் குமாருக்கு எதிராக கற்பழிப்பு புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த கெஜ்ரிவால் கடும் அதிர்ச்சியடைந்தார். சந்தீப் குமார் மீது அந்த பெண் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் இந்த விவகாரத்தை மிகவும் கடுமையாக எடுத்து, சந்தீப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்தார்.

டெல்லி முன்னாள் மந்திரி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆபாச சி.டி. விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: