வெள்ளி, 9 செப்டம்பர், 2016

: சீமான் :தமிழக மக்களையும் இந்திய மக்களாக கருத வேண்டும்!


மின்னம்பலம்,காம் :காவிரி தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான பிரச்னையில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், ‘தமிழக மக்களையும் இந்திய மக்களாக கருதி, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில் கூறியதாவது, “தமிழகத்தின் ஒவ்வொரு ஜீவாதார பிரச்னைக்கும் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம். மத்திய அரசு, தமிழர்களின் பல்வேறு பிரச்னைகளில் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்க முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
காவிரி பிரச்னையில் தண்ணீர் திறந்து விடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்னையிலும் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்துக்குரிய தண்ணீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. ஒவ்வொரு பிரச்னையிலும் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது. இனிமேலாவது தமிழக மக்களையும், தமிழக மீனவர்களையும் இந்திய மக்களாக கருதி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சீமான் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: