வியாழன், 8 செப்டம்பர், 2016

BBC :பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவருக்கு மரண தண்டனை

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தண்டனை வழங்கியது 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தினமன்று கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட12 நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழு சந்தேக நபர்களை விடுதலை செய்ய முதலில் தீர்மானித்தனர். அதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட ஐந்து பேரும் சந்தேக குற்றவாளிகளென்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதன்படி பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்திற்கு அமைய சந்தேக நபர்கள் ஐந்து பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகளை சமர்ப்பிக்கவுள்ளதாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருநிகா பிரேமச்சந்திர, தற்போதையை அரசாங்கத்தின் கீழ் நீதிமன்ற சுதந்திரம் நிலை நாட்டப்பட்டதன் காரணமாக இந்த தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடிந்ததாக தெரிவித்தார். ஹிருநிகா பிரேமச்சந்திர, கடந்த ஆட்சியின் கீழ் தனது தந்தையின் கொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று ஹிருனிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: