வியாழன், 8 செப்டம்பர், 2016

சிறப்பு அந்தஸ்து மறுப்பு: ஆந்திராவில் முழு அடைப்பு!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு மென்பொருள் நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சில பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மாநிலத்தின் பொருளாதார மையமாக விளங்கிய ஐதராபாத் நகரம், தெலங்கானா மாநிலத்துடன் இணைந்துவிட்டது. ஆனால், பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனினும், அந்த மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தெரிவித்திருந்தார். அதையடுத்து, தங்கள் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை ஆந்திர அரசு வலியுறுத்தி வந்தது.

இதைக் கண்டித்து வரும் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அப்போது ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது மத்திய அரசு. ஆந்திராவில் ஆட்சியில் அமர்ந்த தெலுங்கு தேசம் கட்சியும் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தது. தெலுங்கு தேசத்தின் கூட்டணி கட்சியான பாஜக-வும் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என கூறி வந்தது.
இந்நிலையில் திடீரென ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து தர முடியாது; அதேநேரத்தில் கூடுதல் நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். ஆந்திரப்பிரதேச மாநிலத்துக்கு வரிச் சலுகை, போலாவரம் அணைத் திட்டத்துக்கு முழு நிதியுதவி உள்பட சிறப்பு நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை.
ஆந்திர சட்டப்பேரவை வியாழக்கிழமை (செப்.8) கூடுகிறது. இந்நிலையில், அந்த மாநிலத்துக்குச் சிறப்பு நிதியுதவி வழங்குவது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: “ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திர மாநிலம் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கென ஒரு ரயில்வே மண்டலம் உருவாக்கப்படும். இதுதவிர, போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்துக்கான முழு நிதியுதவியை மத்திய அரசே அளிக்கும். இத்திட்டத்தை தேசிய திட்டமாக மத்திய அரசு அறிவித்த கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு முழு நிதியுதவி அளிக்கப்படும். எனினும், இந்தத் திட்டத்தை ஆந்திர மாநில அரசே செயல்படுத்தும்.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்றால் என்னென்ன சலுகைகளைப் பெறுமோ, அதற்கு நிகரான சலுகைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது 2020ஆம் ஆண்டு இறுதிவரை வழங்கப்படும். மேலும், ஆந்திர மாநிலத்துக்கு இரண்டு வரிச்சலுகைகள் அளிக்கப்படும். அந்தச் சலுகைகளை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் விரைவில் அறிவிக்கும்” என்று ஜேட்லி கூறினார். அவரது இந்த அறிவிப்பு ஆந்திராவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆந்திர எதிர்க்கட்சித் தலைவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது, “சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்று கூறினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால், இப்போது மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் சந்திரபாபு நாயுடுவும் இந்த விவகாரத்தில் நாடகமாடி வருகிறார்கள். பந்த் சிறப்பு அந்தஸ்தை பெற்றுத் தர முடியாத முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வேண்டும். ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து தர மறுப்பதைக் கண்டித்து வரும் சனிக்கிழமையன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். minnambalam.com

கருத்துகள் இல்லை: