புதன், 23 மார்ச், 2016

ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கப் போகும் விஜயகாந்த்!

 ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கப் போகும் விஜயகாந்த்!tamil.chennaionline.com: சென்னை,மார்ச் 23 (டி.என்.எஸ்) தமிழக சட்டசபைக்கான தேர்தல் நாள் அறிவிக்காத முன்பே, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்தன. முதலில்  திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும். விஜயகாந்தை எப்படியாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி முடிவு செய்தது. ஆனால், மறுபுறம் பா.ஜ.க விஜயகாந்துக்கு வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், திமுக-வும் விஜயகாந்தின் மீது ஆர்வத்தைக் காட்ட, தேமுதிக-திமுக கூட்டணி உறுதி என்ற சூழல் உருவானது.
இதையடுத்து, தேமுதிக - திமுக கூட்டணி உறுதி, என்ற ரீதியில் திமுக தலைவர் கருணாநிதி, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.
ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த விஜயகாந்த், தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். அத்துடன் இல்லாமல், தேமுதிக ஒத்த கொள்கையுடனை, தனது தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் தயார், என்றும் அறிவித்தார்.
இதன் பிறகும், திமுக-வும், பா.ஜ.க-வும் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்ட, மீண்டும் பரபரப்பானது அரசியல். ஒவ்வொரு நாளும், விஜயகாந்த், எங்களுடன் வருவார், என்று பா.ஜ.க, திமுக, மக்கள் நலக் கூட்டணி மாறி மாறி அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்க, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதிஷூடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைகுப் பிறகு, விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். தேமுதிக-வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும், விஜயகாந்துக்கு முதல்வர் வேட்பாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
விஜயகாந்தின், இந்த கூட்டணி முடிவால் அவர் தமிழகத்தின் முதல்வராகி விடலாம் என்று நினைக்க தொடங்கி விட்டாலும், உண்மையில் அவரது இந்த முடிவு அதிமுக-வுக்கு தான் சாதகமாக அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கட்சி ஆரம்பித்து, 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும், தனது உள்ள வாங்கு வங்கியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதையடுத்து 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ,அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களை கைப்பற்றிய விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஷ்த்தை பிடித்தார். இதையடுத்து, இந்த தேர்தலில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டால் ஆட்சி நமக்குத்தான், என்று நினைத்தவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக, திமுக-வுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, தற்போது மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து, 124 தொகுதிகளை பெற்றுவிட்டாலும், அந்த தொகுதிகளில் அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா? என்பது தான் கேள்வி.
இந்த கூட்டணி உடன்பாட்டினால் விஜயகாந்த் முதல்வராக வாய்ப்பு கிடைக்குமா என்று ஆராய்ந்து பார்க்கும் போது இந்த கூட்டணியினால் திமுகவுக்குத்தான் பெரும் இழப்பு என்றும் இதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புதான் இருக்கிறது. வேண்டுமானால் விஜயகாந்த் மீண்டும் எதிர்கட்சி தலைவராக வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனனர்.
முதல்வர் ஆசையில் கட்சிகள் பிரிந்து கிடப்பதால் அதிமுகவுக்கு இது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றுதான் தெரிகிறது. எனவே இதனால் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கப்போவதும், விஜயகாந்த் மீண்டும் எதிர்கட்சி தலைவராகவே இருப்பார், என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: