சனி, 26 மார்ச், 2016

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை: தருண் விஜய் உறுதி

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.
 சென்னையில் அவரை கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சுதந்திரம் பெற்றது முதல் பல ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், இலங்கை அகதிகள் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நல்லுறவு இருந்து வருகிறது. ;இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை உணர்ச்சிப்பூர்வமாக கருதி, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
 இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முகாம்களில் உள்ளோர் வலுக்கட்டாயமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய பின்னர், விருப்பத்தின் பேரிலேயே அனுப்பப்படுவர்.
 அகதிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். அகதிகளை அரசு அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். விதிமுறையை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 திருமங்கலம் அகதிகள் முகாம் சம்பவம் போன்று இனிமேல் நடக்காமல் இருக்க அதிகாரிகளை எச்சரிக்கிறேன். திருச்சி அகதிகள் முகாமில் உள்ள தயன்ராஜ் விவகாரத்தில், அவரது வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 பாஜக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத், வெளியுறவு விவகார இந்திய அறக்கட்டளையின் இயக்குநர் கே.பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பணி நியமனங்கள் இல்லை: மாணவிகள் புகார்
 கல்லூரி வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அகதிகள் என்று காரணம் காட்டி பணி நியமன உத்தரவகள் வழங்கப்படுவது இல்லை என புழல் அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவிகள் ஜே. நிரோஜா, கமலாலோகி ஆகியோர் கூறினர்.
 இதுகுறித்து அவர்கள் கூறியது:- பெற்றோருடன் 1990-ஆம் ஆண்டே தமிழகத்துக்கு புலம் பெயர்ந்துவிட்டோம். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறோம். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றதுடன் வளாகத் தேர்வில் பலமுறை தேர்வுசெய்யப்பட்டோம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின்போது, இலங்கை அகதி என்ற ஒரே காரணத்துக்காக பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.
 தமிழகத்திலேயே இருக்கவே விரும்புகிறோம். இங்குள்ள பிறப்பு, கல்விச் சான்றிதழ்கள் மூலம் இலங்கையில் வேலைவாய்ப்புகள் பெறுவது மிகவும் கடினம். எனவே, தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்றவகையில் விதிமுறைகளை தளர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்  தினமணி.com

கருத்துகள் இல்லை: