சனி, 26 மார்ச், 2016

உடுமலை சாதி ஆணவ கொலை.....தமிழக முதல்வரின் மோசமான மௌனம்!

விகடன்.com திருப்பூர்:உடுமலையில் நடந்த சாதி ஆணவக் கொலை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுவரை வாய் திறக்காதது ஏன்? என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி கேள்வி எழுப்பினார். 'சாதி ஆணவக் கொலைகளை ஒழித்து மானுடம் காத்திட வேண்டும்' என்ற முழக்கத்தோடு திருப்பூர் மாநகராட்சி அலுவகம் அருகில்,  மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய உ.வாசுகி, "உடுமலையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் குடும்பத்தாருக்கும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கௌசல்யாவிற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கௌசல்யாவின் படிப்புச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும், இந்த கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொலை சதித்திட்டத்தை தீட்டிய, அதற்கு தூண்டுதலாக இருந்த கௌசல்யாவின் குடும்பத்தாரை, குறிப்பாக அவரது தாயாரை கைது செய்ய வேண்டும்.

'சாதி ஆணவக் கொலை நடைபெறுவதற்கான அச்சுறுத்தல் இருந்தும் அதைத் தடுக்கத் தவறும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி சங்கரும், கௌசல்யாவும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலைச் சந்தித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கூறியும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க காவல் துறை தவறிவிட்டது. காவல்துறை நடவடிக்கையால் ஊக்கம் பெற்ற கொலைகாரர்கள் சங்கரைக் கொலை செய்துள்ளனர். எனவே இதில் தொடர்புடைய பழனி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் காவல் நிலைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரின் கல்விக் கடனைத் திருப்பி செலுத்தும் பொறுப்பைத் தமிழக அரசே ஏற்க வேண்டும், சாதி ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

தற்போது இளைஞர்கள் மத்தியில் சாதிய உணர்வு தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே சாதி ஆணவத்தை, சாதி வெறியைத் தூண்டக்கூடிய சக்திகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய கட்டமைப்பு, சாதிக்கு எதிராக மனிதநேயத்தை முன்னிறுத்தி தமிழக அரசே பரப்புரை செய்ய வேண்டும். தேர்தலில் அரசியல் கட்சிகள், சாதிய கட்சிகளுடன் உடன்பாடு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.


நீதிபதி மோகன் கமிஷன், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால்தான், சாதி வெறியர்களால் கவரப்பட்டு இதுபோன்ற வெறிச் செயல்கலை செய்து வருகின்றனர் என தெரிவித்திருந்தது. இவ்வளவு பெரிய படுகொலை நடந்தும் முதல்வர் ஜெயலலிதா வாயை திறக்காமல் மெளனம் காத்துவருகிறார். சங்கரின் படுகொலையைவிட முதல்வரின் மெளனம் மோசமானது. திமுக தலைவர் கருணாநிதி,  அந்த சமூகத்தின் ஓட்டு கிடைக்காது என்பதற்காக மூன்று நாட்களாக வாயை திறக்கவில்லை. பா.ம.க கட்சியின் ராமதாஸ்,  கண்டிக்கிறோம் என ஒரு வார்த்தைகூட கூறவில்லை. இவர்கள் நடத்தும் கட்சி பாட்டாளிகளுக்கு என கூறுவது வெட்கப்பட வேண்டிய செயல். எந்த ஒரு பிரதான கட்சிகளும் வாய் திறக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கண்டனம் தெரிவித்தது. அந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

-ச.ஜெ.ரவி

கருத்துகள் இல்லை: