திங்கள், 15 பிப்ரவரி, 2016

BJP-DMDK- பிரேமலதா - சுப்பிரமணியம் சுவாமி கூட்டணி....எப்பவோ உறுதியாயிடுச்சு...?

காஞ்சிபுரம்: திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஊழலில் ஊறிய கட்சிகள் என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளதன் மூலம்,  கூட்டணிக்கு வருமாறு திமுக விடுத்துள்ள கோரிக்கையை தேமுதிக நிராகரித்துவிட்டது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தில்,  தே.மு.தி.க. மாநில மாநாடு,  வருகின்ற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''தே.மு.தி.க.வின் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டணி குறித்த அறிவிப்பை மாநாட்டின்போதோ, மாநாடு முடிந்த ஒரு வாரத்திலோ கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி என்று பல்வேறு அணிகள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளன. பலரும் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைத்துள்ளனர். தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு தொண்டர்கள் ஆற்றிய அயராத பணியே இதற்குக் காரணம். யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தே.மு.தி.க. தலைமையில் இருக்குமா என்பதையும் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

தி.மு.க -  காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்ட 30 நிமிடங்களிலேயே வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஊழலில் ஊறிய, கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமான இரு கட்சிகளும் இணைந்துள்ளதாகவே பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பிறந்த மண்ணில் நடைபெறும் இம் மாநாடு, தமிழக அரசியலில் அவர் ஏற்படுத்தியது போன்ற திருப்புமுனையை மீண்டும் ஏற்படுத்தும். அதற்காகவே இம் மாநாட்டுக்கு 'அரசியல் திருப்புமுனை மாநாடு' என்று பெயர் வைத்துள்ளோம். மாநாட்டில் பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதை மாநாட்டின்போது நீங்களே நேரில் பார்க்கலாம்.

தமிழக அரசு அறிக்கை அரசியலை நடத்தி வருகிறது. மத்திய அரசு அளித்த நிதியில் பொதுமக்களுக்கு ரூ.5,000 அளித்துவிட்டு தாங்கள் அளித்ததுபோல மாநில அரசு காட்டி வருகிறது. மாநில அரசின் மெத்தனத்தால்தான் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்" என்றார்.
திமுக கூட்டணிக்கு 'நோ'... பா.ஜ. கூட்டணிக்கு 'எஸ்'?
தமிழக அரசியல் கட்சிகளில் தற்போது தேமுதிகவுக்குதான் ஏக கிராக்கி. பா.ஜனதா, திமுக, மக்கள் நலக்கூட்டணி என மூன்று தரப்புமே அக்கட்சியை தங்களுடன் கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்து வரும் நிலையில், தங்களது நிலை என்ன என்பதை விஜயகாந்த் வெளியிடாமல் கையை மூடியே வைத்துள்ளார். இதனால் அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தேமுதிகவை கூட்டணிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாக, தி.மு.க -  காங்கிரஸ் கூட்டணி ஊழலில் ஊறிய கட்சிகள் என பிரேமலதா கடுமையாக சாடி இருப்பதன் மூலம், திமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இடம்பெறப்போவதில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகவிட்டதாகவே தெரிகிறது.
எனவே மீதமுள்ள பா.ஜனதா அல்லது மக்கள் நலக்கூட்டணி உடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்க முடியும். இந்நிலையில் பா.ஜனதா உடன் கூட்டணி அமைக்கவே அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த சில தினங்களாக பா.ஜனதா தலைவர்கள், விஜயகாந்தை தொடர்ந்து சந்தித்துப்பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் இன்னொருபுறம் அதிமுகவுடனும்  இன்னொரு 'சேனல்' மூலம் பா.ஜனதா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கடைசி வாய்ப்பாக மட்டுமே மக்கள் நலக்கூட்டனியை விஜயகாந்த் பயன்படுத்துவார் எனத்தெரிகிறது. விகடன்.com

கருத்துகள் இல்லை: