வியாழன், 18 பிப்ரவரி, 2016

அழகிரி மறுப்பு: நான் அப்படி சொல்லவே இல்லை...எனக்கு facebook கே கிடையாது

சென்னை: திமுக பற்றி பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி முகநூலில் கூறியிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கமே இல்லை என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அழகிரிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது. தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கொள்கை கிடையாது என்றும், அ.தி.மு.க,வை அந்த கூட்டணி வெல்ல முடியாது என்று அழகிரி கூறிய கருத்தை, யாராலும் ஏற்க முடியாது. அழகிரி செய்யும் துரோகத்திற்கு, என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவரது கருத்துகளை, தி.மு.க., தொண்டர்கள் பொருட்படுத்த தேவையில்லை, அலட்சியப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். 
 
 இதற்கு பதில் அளிக்கும் வகையில், தனது முகநூல் பக்கத்தில் மு.க.அழகிரி கருத்துக்களை பதிவு செய்திருந்ததாக ஒரு செய்தி வெளியானது. அதில் திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என,என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன். பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும். இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால் கட்சியைப்பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கருத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முகநூல் பயன்படுத்தும் பழக்கம் கிடையாது எனவும் அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (17.2.2016) பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் எனது முகநூல் பக்கத்தில் சில கருத்துக்கள் வெளியிட்டிருப்பதாக வந்துள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது. முகநூல் பக்கத்தை பயன்படுத்தும் பழக்கம் எனக்கு கிடையாது. நான் அப்படியொரு செய்தியை கொடுக்கவில்லை என மறுத்துள்ளார் அழகிரி
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: