வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தினமணியின் பயம்: தேமுதிக திமுக கூட்டணி அமைந்து விடுமோ?

தேமுதிக தயங்குவது எதனால்?
விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறார், தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பதைத் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதன் வெற்றியும், ஆட்சியைப் பிடிக்கும் கனவும் தேமுதிகவின் முடிவில்தான் இருக்கிறது என்பதால், கட்சியின் மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை, விஜயகாந்தின் முடிவுக்காக, நகத்தைக் கடித்தபடி பதற்றத்தில் காத்திருக்கிறது திமுக.  இந்த செம்பு நேர்ல போயி பார்த்த மாதிரி நகத்தை கடித்த படி...அடங்கொப்பரான ஜிங்குஜாவுக்கு அளவே இல்லை 

 கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுகவுடனான தேமுதிக கூட்டணியின் வெற்றியின் அடிப்படையில் இந்த முறை தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வந்துவிட்டால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது திமுக. தேமுதிக இல்லாத திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது, வலுவான மூன்றாவது அணி அமையுமானால் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதைத் திமுக நன்றாகவே உணர்ந்திருக்கிறது.

 திமுக கூட்டணியில் இணைவதில் தேமுதிக தயக்கம் காட்டுவதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது பாதிக்கப்படாத விஜயகாந்தின் முதலமைச்சர் கனவு, இந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைப்பதால் மட்டும் பாதிக்கப்பட்டுவிடுமா என்கிற கேள்விக்கு, திமுக, அதிமுக, தேமுதிக என்று மூன்று கட்சிகள் குறித்தும் நன்றாகவே தெரிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் விளக்கம் தந்தார்.
 ""கடந்த முறை தேமுதிகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்ததில் இரண்டு கட்சிகளுக்குமே ஒரு ராஜதந்திரத் திட்டம் இருந்தது. அதிமுகவும் தேமுதிகவும் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்களின் கட்சிகள். தேமுதிகவின் வாக்கு சதவீதத்தில் சரிபாதி வாக்குகள் எம்.ஜி.ஆர். ஆதரவு வாக்குகள். எம்.ஜி.ஆர். வாக்கு பிளவுபடாமல் முழுமையாகத் தனக்கு வர வேண்டும் என்று அதிமுக விரும்பியது. தேமுதிக எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லிப் பிரசாரம் செய்யக்கூடாது என்கிற நிபந்தனையுடன்தான் அதிமுக தலைமை தேமுதிக கூட்டணிக்கு சம்மதித்தது. தேமுதிகவுக்கும் ஒரு ரகசிய எண்ணம் இருந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதன் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவின் எம்.ஜி.ஆர். விசுவாசிகளை விஜயகாந்த் கவர முடியும் என்பதும், அதில் ஒரு பகுதியினரை, வருங்காலத்தில் தேமுதிகவுக்கு இழுத்துக்கொள்ள முடியும் என்பதும்தான் அந்தத் திட்டம். இதைத் தெரிந்து கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்ததும், தேமுதிகவை வலுக்கட்டாயமாகக் கழற்றிவிட்டதற்குக் காரணம், தன்னிடம் இருக்கும் எம்.ஜி.ஆர். வாக்கு வங்கி விஜயகாந்துக்குப் போய்விடக் கூடாது என்பதால்தான்'' என்றார் அவர்.
 தேமுதிகவில் இருக்கும் எம்.ஜி.ஆர். அனுதாபிகள், விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அந்த அணியை ஆதரிப்பார்களா அல்லது அதிமுகவுக்கு வாக்களிப்பார்களா என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது. அப்படியே தேமுதிகவின் வாக்கு பிரிந்தாலும், அது தங்கள் கூட்டணியின் வெற்றியை பாதிக்காது என்கிறார்கள் திமுகவினர். தேமுதிக தங்கள் அணிக்கு வந்துவிட்டால் அது வலுவான கூட்டணி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தித் தங்கள் வெற்றியை உறுதிப்படுத்திவிடும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.
 தேமுதிக இணைந்தால் அது வெற்றிக் கூட்டணி எனும்போது விஜயகாந்த் ஏன் திமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயங்குகிறார்? அதற்கும் காரணம் இருக்கிறது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். அதுவரை விஜயகாந்த் மட்டும் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுவந்த நிலைமையை மாற்றிக் கணிசமான எண்ணிக்கையுடன் சட்டப் பேரவைக்குச் செல்வதன் மூலம், தேமுதிகவை திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உயர்த்த முடியும் என்பதால்தான் 2011-இல் அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தார் விஜயகாந்த். அவரது எதிர்பார்ப்பையும் தாண்டி, தேமுதிக அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக, திமுகவைவிட அதிக இடங்களில் வெற்றியும் பெற்றது.
 இப்போது நிலைமை அதுவல்ல. திமுக கூட்டணியில் இணைவதால், அதிமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் அடுத்த சட்டப் பேரவையில் இருப்பது சாத்தியமல்ல என்பது விஜயகாந்துக்குத் தெரியும். 2006 தேர்தலில் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் என்று மிக வலுவான கூட்டணி திமுகவுக்கு இருந்தும்கூட, அதிமுக 61 இடங்களில் வெற்றி பெற்றது என்றால், இப்போது அதைவிட அதிகமான இடங்களை நிச்சயம் பெற முடியும் என்று விஜயகாந்த் கணக்குப் போடுகிறார். தேமுதிக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு திமுக கூட்டணியில் இடம் தரப்படாது என்பது அவருக்குத் தெரியும்.
 தேமுதிக தலைமையின் மிகப் பெரிய பயம், திமுகவின் நம்பகத்தன்மை. ஸ்டாலினுக்குப் போட்டியாக விஜயகாந்தை வளர்ப்பதிலும், தேமுதிகவை வலிமையான சக்தியாக வளரவிடுவதிலும் திமுகவுக்கு என்ன அக்கறை என்கிற யதார்த்த உண்மையை விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.
 ""அதிமுகவைப் பொருத்தவரை, பேரம் பேசிக் குறைந்த இடங்களைத்தான் கூட்டணிக் கட்சிகளுக்குத் தருவார்கள். ஆனால், தனது கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெறச் செய்ய எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். தொண்டர்களும் முனைந்து வேலை பார்ப்பார்கள். சுணக்கம் காட்டினால் தலைவியின் கோபத்துக்கு ஆளாவோம் என்கிற பயம் அவர்களுக்கு உண்டு. திமுகவைப் பொருத்தவரை, தலைமை நன்றாகவும், சுமுகமாகவும் இருக்கும். ஆனால், தொகுதியில் தொண்டர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யமாட்டார்கள். ஒன்று கூட்டணிக் கட்சி வேட்பாளரைக் கசக்கிப் பிழிந்து பணம் பெறுவார்கள். இல்லையென்றால் தங்களது திமுக வேட்பாளர் நிற்கும் தொகுதியில் வேலைபார்க்கச் சென்று விடுவார்கள். கூட்டணிக் கட்சியை பயன்படுத்தித் தான் வெற்றி பெறுவதில்தான் திமுக குறியாக இருக்குமே தவிர, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றி குறித்து அக்கறை காட்டாது. இதுதான் பாமக, தமுமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என்று திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட எல்லா கட்சிகளின் அனுபவமும். அதனால்தான் அவர்கள் திமுக அணியில் சேர மறுக்கிறார்கள்'' என்று தமுமுக பிரமுகர் ஒருவர் கூறினார்.
 ""1996-இல் திமுகவுடன் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றதற்குக் காரணம், அன்று ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த கடுமையான எதிர்ப்பு அலை. இப்போது அப்படி இல்லாத நிலைமையில், தேமுதிக வாக்குகள் அப்படியே திமுகவுக்கு விழுவதுபோல, திமுக வாக்குகள் தேமுதிகவுக்கு விழாமல் போனால், திமுக ஆட்சியைப் பிடிப்பதும், தேமுதிக தெருவில் நிற்பதும் என்கிற நிலைமையல்லவா ஏற்படும்?'' என்கிற கேள்விதான் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜயகாந்தை யோசிக்க வைக்கிறது என்கிறார்கள்.
 விஜயகாந்திற்கு இன்னொரு நியாயமான பயமும் இருக்கக்கூடும். அது, 1999 மக்களவைத் தேர்தலில் முரசொலி மாறனுக்குப் போட்டியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சேலத்தில் வாழப்பாடி ராமமூர்த்தியையும், 2009 தேர்தலில் ஈரோடில் ஈ.வெ.கி.ச. இளங்கோவனையும்போல, ஸ்டாலினுக்குப் போட்டியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன்னை திமுக ஏன் திட்டம்போட்டுத் தோற்கடிக்காது என்கிற விஜயகாந்தின் ஐயப்பாடு முக்கியமான காரணம். 1962 சட்டப் பேரவைத் தேர்தலில் கவியரசு கண்ணதாசனிலிருந்து தொடங்கி பலராலும் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுதான் இது.
 ""கூட்டணி பலத்தில் கணிசமான தேமுதிக உறுப்பினர்கள் வெற்றி பெற்று, விஜயகாந்த் தோற்கடிக்கப்பட்டால், அதனால் என்ன லாபம்? அந்த எம்.எல்.ஏ.க்கள் தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்குத் தாவக்கூடும். திமுகவை ஆட்சியில் அமர்த்துவதிலும் மு.க. ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதிலும் நமக்கு என்ன லாபம்? அதைவிட வலுவான மூன்றாவது அணி அமைத்து, கணிசமான வாக்குகளுடன் திமுகவை அதிக இடங்களில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளுவதுதான் புத்திசாலித்தனம், ராஜதந்திரம்'' என்று விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் கருதுவதாகத் தெரிகிறது.
 தேமுதிகவைப் முன்னிலைப்படுத்தும் பாஜக அணியானாலும் சரி, மக்கள் நலக் கூட்டணியானாலும் சரி, 2006 இல் தனியாகவே நின்று போட்டியிட்ட போதே வென்ற விஜயகாந்த், இப்போது எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், வெற்றி பெறுவது உறுதி. திமுக கூட்டணியில் ஒருசில எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றாலும், விஜயகாந்த் வெற்றி பெறுவது உறுதி என்று சொல்ல முடியாது என்பதுதான் தேமுதிகவின் தயக்கத்துக்குக் காரணம்.
 ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, தமது வெற்றியை உறுதிப்படுத்துவது என்கிற மூன்று நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் திமுகவுடன் கூட்டணி அமைப்பதை யோசிக்கலாம் என்று கருதுகிறார் விஜயகாந்த் என்கிறார்கள்.
 திமுகவின் மூத்த தலைவர் ஒருவரிடம் தேமுதிகவின் இந்த நிபந்தனைகளைக் கூறியபோது அவர் சொன்ன பதில்: ""கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது இந்த நிபந்தனைகளை எல்லாம் போட்டிருப்பது தானே? 4% வாக்குகளை வைத்துக் கொண்டு விஜயகாந்த் அளவுக்கு அதிகமாக ஆசைப்படக் கூடாது!'' தினமணி.com

கருத்துகள் இல்லை: