திங்கள், 15 பிப்ரவரி, 2016

நீதிபதி கர்ணன்: சாதி இல்லாத நாட்டுக்கு செல்ல போகிறேன்

சாதியே இல்லாத நாட்டுக்கு செல்ல முடிவு செய்திருக்கிறேன்: ஐகோர்ட்
வளாகத்தில் சி.எஸ்.கர்ணன் பேட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பு வகித்து வரும் சி.எஸ்.கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். தம்மை இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட உச்சநீதிமன்ற ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில், இதுகுறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனிடம் வழக்கு விசாரணைகள் எதையும் ஒப்படைக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (திங்கள்) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்ணன், தம்முடைய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. தம்முடைய உத்தரவுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், தம் மீது மட்டும் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவர் என்பதால் தம் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கிறது. இந்தியா சாதி வெறி பிடித்த நாடு. இங்கு பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். இன்னும் சொல்லப்போனால் தமது பிறப்புரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு, சாதியே இல்லாத நாட்டுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: