புதன், 6 நவம்பர், 2013

இந்திய சீன கூட்டு ராணுவ பயிற்சி 10 நாட்களுக்கு பயிற்சி நடைபெறும்

பீஜிங்:  தீவிரவாதம் தடுப்பது குறித்து இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவ வீரர்களுடன் 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி நேற்று துவங்கியது.இந்தியா-சீனாவுக்குஇடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதன்விளைவாக,சீனாவின் குன்மிங் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கூட்டு போர் பயிற்சி நடந்தது. அதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெல்காமில் நடைபெற்றது. அதன்பின்னர் காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதி என கூறி அங்கு பணி புரிந்த ராணுவ தளபதிக்கு விசா வழங்க சீனா மறுத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்தது.அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு போர் பயிற்சியில் தடை ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக முடிவின் கீழ் காஷ்மீரில் வாழ்பவர்களுக்கு விசா வழங்க சீனா சம்மதித்தது.
பதட்டமான சூழ்நிலை:இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டு ஆக்கிரமித்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவரை தொடர்ந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சீனா சென்றார். அப்போது இரு நாட்டு பிரதமர்களும் எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து தற்போது அமைதி நிலவுகிறது.
மீண்டும் கூட்டு பயிற்சி: கடந்த ஜூலை மாதம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி சீனா சென்றிருந்தபோது இரு நாட்டு ராணுவமும் இணைந்து மீண்டும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட 162 இந்திய ராணுவ வீரர்கள் ஒரு பிரிகேடியர் தலைமையில் சீனாவில் உள்ள செங்டு நகரை சென்றடைந்தனர்.'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' என பெயரிடப்பட்டுள்ள முதல் நாள் கூட்டு போர்பயிற்சி நேற்று நடநதது.
தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த கூட்டு போர்பயிற்சி நடக்கும்..அடுத்த ஆண்டு சீன வீரர்கள் இந்தியாவிற்கு வந்து இதேபோன்ற பயிற்சி செய்ய வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. dinamalar.com

கருத்துகள் இல்லை: