வியாழன், 7 நவம்பர், 2013

சாக்கோ MP மீது ஆர் .ராசா கடும் குற்றச்சாட்டு ! கோழைத்தனமான கட்சி அரசியல் கண்ணோட்டத்தில் கூட்டு குழு அறிக்கை !

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கைக்கு ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை அரைவேக்காட்டு தனமானது, அதை சபாநாயகர் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
கூட்டுக்குழு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ தலைமையில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அதில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 30 எம்.பி.க்கள் இடம்பெற்றனர்.

இக்குழு தனது அறிக்கையை கடந்த 29–ந் தேதி பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாரிடம் தாக்கல் செய்தது. அதில், பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் மீது தவறு இல்லை என்றும், பிரதமரை ஆ.ராசா தவறாக வழி நடத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை, டிசம்பர் முதல் வாரம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆ.ராசா கடிதம்
இந்நிலையில், சபாநாயகர் மீரா குமாருக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய அரசின் கொள்கை பற்றி விளக்கம் அளிப்பதற்கு நான்தான் பொருத்தமான ஆள். அதனால், பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு நான் ஆஜராக அனுமதிக்குமாறு நானும், இதர கூட்டுக்குழு உறுப்பினர்களும் எத்தனையோ முறை கேட்டுக்கொண்டோம். ஆனால், நான் ஆஜராக அனுமதிக்கப்படவில்லை.
வினோத சூழ்நிலை
இதனால், நான் எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தை கூட்டுக்குழு முன்பு தாக்கல் செய்தேன். ஆனால், எனது வாக்குமூலம், கூட்டுக்குழு அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.எனது வாக்குமூலத்தை கூட்டுக்குழுவின் எந்த கூட்டத்திலும் முறையான விவாதத்துக்கு உட்படுத்தவில்லை. இதன்மூலம் உண்மைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.மேலும், நான் கூறிய உண்மைகளை பாராளுமன்ற கூட்டுக்குழு மறுக்கவில்லை. இதன்மூலம், கூட்டுக்குழு விசாரித்திருக்க வேண்டிய உண்மையான விவகாரங்களுக்கு எந்த முடிவும் தெரியாத வினோத சூழ்நிலை உருவாகி உள்ளது.
அரைவேக்காடு
பாராளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ, கட்சி கண்ணோட்டத்தில் செயல்பட்டுள்ளார். அவரது அறிக்கை அரசியல்ரீதியாக இருக்கிறது.எனது வாக்குமூலம் சேர்க்கப்படாத இந்த அறிக்கை, அரைவேக்காட்டு தனமானது. உண்மையை வெளிவர விடாமல் தடுக்கும் கோழைத்தனமான செயல். எனவே, இந்த அறிக்கையை கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோவுக்கே நீங்கள் (சபாநாயகர்) திருப்பி அனுப்ப வேண்டும்.இவ்வாறு ஆ.ராசா கூறியுள்ளார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: