வியாழன், 20 செப்டம்பர், 2012

மத்திய அரசுக்கு மாயாவதி ஆதரவு- முலாயம்சிங் நாளை முடிவு

புதுடெல்லி, செப்.19-மத்திய அரசுக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம்சிங்கின் சமாஜ் வாடி கட்சியும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறி விட்ட நிலையில் இந்த இரு கட்சிகளின் நிலை என்ன என்பது பரபரப்புடன் எதிர் பார்க்கப்படுகிறது. இதுபற்றி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது,
மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அதனால் என்ன நன்மை கிடைத்து விடப்போகிறது.
எனவே மாயாவதி தொடர்ந்து மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பார்.
நாடாளுமன்றத்துக்கு  திடீர் தேர்தல் வருவதை மாயாவதி விரும்பவில்லை, யார் ஆதரவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் திடீர் தேர்தல் வரும் சூழ்நிலையை மாயாவதி உருவாக்க மாட்டார் என்றார். ஆனால் முலாயம்சிங் யாதவ் தற்போதைய நிலையில் தனது முடிவு பற்றி இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
சமீபத்தில் மத்திய அரசை முலாயம்சிங் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் மிரட்டினார். இதுபற்றி முலாயம்சிங் யாதவிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற  குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் எங்கள் நிலைப்பற்றி முடிவு எடுப்போம் என்றார். அவர் மேலும் கூறுகையில் மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடு கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வோம். மத்திய அரசின் முடிவு பொது மக்களையும், விவசாயிகளையும் மிகவும் பாதிக்கிறது.
ஊழல், பணவீக்கம் மக்களை மேலும் வாட்டுகிறது. இது போன்ற காரணங்களால் காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது எனறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: