திங்கள், 17 செப்டம்பர், 2012

போஃபர்ஸ் கதையை ஏன் கிளறுகிறார் ஷில்குமார் ஷிண்டே

சோனியாவுக்கு ஏற்படலாம் சந்தேகம்: இந்த ஆள் ஏன் ‘அந்த’ கதையை கிளறுகிறார்? போஃபர்ஸ் ஊழல்தான் நாட்டின் மிகப்பெரிய விவாதமாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மக்கள் அதனை மறந்து விட்டனர்.

Viruvirupu
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருத்து தெரிவித்து, வம்பில் சிக்கிக் கொண்டார். இவரது கருத்து டெல்லி அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. பல்வேறு கட்சியினரும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தனது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சுஷில்குமார் ஷிண்டே விளக்கமளித்துள்ளார்.
டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய பிரச்னைகளால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு குறித்த சர்ச்சை சற்றே அடங்கியது போல் காணப்பட்டது. ஆனால், அதனை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே.

மஹாராஷ்டிராவின் புனே நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், “போபர்ஸ் ஊழலை (ராஜிவ் காந்தியுடன் தொடர்புடையது) போல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டையும் நாட்டு மக்கள் மறந்து விடுவார்கள்” என்றார்.
“கடந்த காலத்தில் போஃபர்ஸ் ஊழல்தான் நாட்டின் மிகப்பெரிய விவாதமாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மக்கள் அதனை மறந்து விட்டனர். தற்போது நிலக்கரி ஒதுக்கீட்டு முறைகேடு எழுந்துள்ளது. இதுவும் மறக்கப்பட்டு விடும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் பிரச்னை கைவிடப்படும்போது, அதில் தொடர்புடையவர்களும் குற்றமற்றவர்களாவர்” இவ்வாறு ஷிண்டே கூறியிருந்தார்.
சுஷில்குமாரின் இந்தக் கருத்துக்கு முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது.
“காங்கிரஸ் கட்சிக்கு, நாட்டு மக்களின் நலனை விட, வெளிநாட்டினருக்கு லாபம் ஈட்டித் தருவதே பிரதான கொள்கையாக இருக்கிறது” என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நாக்வி குற்றம்சாட்டினார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “நிலக்கரி சுரங்க ஊழலால் ஏற்பட்ட அவமானம், காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட கால பின்னடைவை ஏற்படுத்தும். மக்கள் அதனை மறக்க நினைத்தாலும், அதனால் ஏற்பட்ட அவமானம், மக்களை மறக்க விடாது. எனவே, ஊழலை மறந்து விடுவார்கள் என்று கருதுவதை விட்டுவிட்டு, அவர் (ஷிண்டே) தனது அரசின் பதவிக் காலம் பற்றி கவலை கொள்ளலாம்” என்றார்.
நிலைமை சிக்கலாவதை புரிந்து கொண்ட சுஷில்குமார் ஷிண்டே ‘பல்டி’ அடித்தார். “ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கள் காலப்போக்கில் மறந்துவிடும் என்று தான், நான் கூறினேன். இதற்கு பல உதாரணங்களையும் சுட்டிக்காட்டினேன். நிலக்கரி ஊழல் தொடர்பாக எதிர்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் என கூறினேன். எனது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
சுஷில்குமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் விளக்கமளித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக் விஜய் சிங், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டினார். “போபர்ஸ் குறித்து ஷிண்டே கூறியதை நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டீர்கள். போபர்ஸ் விவகாரத்தில் சில பொய்யான தகவல்களை சொல்லி, அதனை மூடிமறைக்க எதிர்கட்சிகள் முயலுகின்றன” என்றார்.
சுஷில்குமாருக்கு எதிர்க்கட்சிகளால் ஏற்பட்டுள்ளது சிறிய சிக்கல்தான். பெரிய சிக்கல் எப்போது ஏற்படுமென்றால், “தேவையில்லாமல் இவர் ஏன் போபர்ஸ் பற்றி பேசி, ராஜிவ் காந்தியை வம்புக்கு இழுக்கிறார்” என்று சோனியா நினைக்கும்போதுதான்!

கருத்துகள் இல்லை: