திங்கள், 17 செப்டம்பர், 2012

நித்திய அன்னதானம் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி பாராட்டு

சென்னை: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நித்திய அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி அமைப்பு தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் முக்கியத் திருக்கோயில்களில் நித்திய அன்னதான திட்டத்தை அறிவித்து செயல்படுத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி பாராட்டைத் தெரிவிக்கிறது.

தமிழக திருக்கோயில்களில் தொன்றுதொட்டு பல்வேறு அறங்கள் நடைபெற்று வந்தன. அதில் முக்கியமானது அன்னதான தர்மம். அதனை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தவர் தமிழக முதல்வர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் முக்கிய திருத்தல ஆலயங்களில் நித்திய அன்னதான திட்டத்தை அறிவித்து ஸ்ரீரங்கம் ஆலயத்தில் துவக்கி வைத்துள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.
இந்த அன்னதானத்தை இறைவனுக்கு நிவேதனம் செய்து, அன்னபிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கிடவும், உணவு உண்ணும் முன் பக்தர்கள் அந்தத் தல இறைவனின் நாமாவளியைப் பாராயணமாக, அதாவது, `ஓம் நமோ நாராயணா', `ஓம் நமச் சிவாயா', `ஓம் சரவண பவ', `ஓம் சக்தி' - என அந்த அந்தத் தல இறைவன் நாமாவளியைச் சொல்லி சாப்பிடுவது, பக்தர்களின் மனங்களில் அந்தத் தல இறைவன் அருளால் இந்த அன்னப் பிரசாதம் கிடைத்திருக்கிறது என்ற பக்தியை ஏற்படுத்தும். இந்த பக்தி பூர்வமான செயல்பாட்டை ஆலயத்தில் உள்ள பட்டாச்சார்யர்கள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் மூர்த்திகள் முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது வழக்குமொழி. நாம் செயல்பட சக்தி வேண்டியிருக்கிறது. அந்தச் சக்தியை தருவது அன்னம். இந்த உடலை அன்னமய கோஷம் என்று யோக நூல்கள் கூறுகின்றன. உடல் இயங்க சக்தியை அளிப்பது அன்னம். அதுவும் திருக்கோயில் இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள் அளிக்கும் அன்னபிரசாதம் அறம் வளர்க்கும் நல்லதோர் செயல்பாடு.
இந்த அறக்கொடை தொடர்ந்து நடைபெறவும், இந்து சமய அறநிலையத்துறை செயல்திட்டம் வகுக்க வேண்டும். மேலும் இந்த நற்செயலுக்கு தமிழக அரசின் முக்கிய பங்கேற்பும் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: