திங்கள், 17 செப்டம்பர், 2012

திமுக சார்பில் புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்க மாட்டார்கள்

சென்னை: மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் புதிய அமைச்சர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று திமுக தலைவர் கலைஞர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அப்போது கூடுதல் இலாக்காக்களை வைத்துள்ள அமைச்சர்களிடம் இருந்து அவை பறிக்கப்படும் என்றும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நிதி, உள்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பிற அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் என்று பேசப்படுகிறது.

திமுக அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் பதவி விலகியதை அடுத்து இரண்டு காலியிடங்கள் உள்ளன. அந்த 2 இடங்களையும் திமுகவுக்கே அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறாராம். ஆனால் அமைச்சரவையில் இடம் பெறப்போவதில்லை என்று திமுக தலைவர் கலைஞர்  முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அண்மை காலமாக மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் தான் திமுக தனது அதிருப்தியைக் காட்ட இந்த முடிவுக்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதே சமயம் திமுக ஒரு வேளை மனம் மாறி அமைச்சரவையில் சேர விரும்பினால் டி.ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் அமைச்சராகலாம் என்று தெரிகிறது. மேலும் டி.கே.எஸ். இளங்கோவனும் அமைச்சராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: