வியாழன், 15 மார்ச், 2012

மம்தாவும் கலைஞரும் ஒரே சமயத்தில் மிரட்டல் மத்திய அரசு தாங்குமா?

எது நடக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்ததோ அதுவே நடந்துவிட்டது. ஆம். மமதா பானர்ஜியும்  கலைஞரும்
மத்திய அரசுக்கு எதிராக ஒரே சமயத்தில் களத்தில் குதித்துள்ளனர். இருவருடைய நோக்கமும் வெவ்வேறானவை. ஆனால் செய்யும் காரியம் ஒன்றுதான். மிரட்டல்.
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வைத் தன்னால் ஏற்கமுடியவில்லை. உடனடியாக அவற்றை வாபஸ் பெறவேண்டும் என்றார் மமதா பானர்ஜி. இதில் முரண்நகை என்னவென்றால் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான்.
கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது என்ற  மமதா பானர்ஜியின் கோரிக்கையை மீறிவிட்டார் திரிவேதி. அதற்குக் காரணம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும்தான் என்பது திரிணாமுல் காங்கிரஸின் முக்கியக் குற்றச்சாட்டு.
ஆனால் ரயில்வே அமைச்சர் திரிவேதியோ திட்டவட்டமாகப் பேசுகிறார். ரயில்வே பட்ஜெட் தொடர்பாக மமதா பானர்ஜியுடன் எவ்வித ஆலோசனையையும் நான் நடத்தவில்லை. என்னுடைய மனச்சாட்சிக்கு உட்பட்ட வகையில் பட்ஜெட்டைத் தயாரித்திருக்கிறேன். ரயில்வே துறையில் நடக்கும் விபத்துகளைத் தடுக்கவேண்டும் என்றால் துறையை நவீனப்படுத்தவேண்டும். அதற்கு நிதி வேண்டும். அதற்காகவே இந்தக் கட்டண உயர்வு. தவிரவும், ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலைமை இந்திய ரயில்வே துறைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு நலனுக்குத்தான் முன்னுரிமை. கட்சி, கட்சித்தலைமை எல்லாம் அதற்குப்பிறகுதான். போதாது? பொங்கி எழுந்துவிட்டார் மமதா பானர்ஜி.
தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுடன் மோதும் தன்னை அடக்கிவைக்கும் நோக்கத்துடனேயே தினேஷ் திரிவேதியைக் கொண்டு காங்கிரஸ் கட்சி காய் நகர்த்துகிறதோ என்ற சந்தேகம் மமதாவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை தினேஷ் திரிவேதி சந்தித்துப் பேசியதும் மமதாவை யோசிக்கவைத்தது. போதாக்குறைக்கு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டு நேராக தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேட்டி கொடுக்கத் தொடங்கியதும் மமதாவின் சந்தேகம் உச்சத்துக்குச் சென்றுவிட்டது.
எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தபிறகு பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார் மமதா பானர்ஜி. ரயில்வே அமைச்சர் திவிவேதியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யுங்கள். அவருக்குப் பதிலான முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்குங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட்டார் மமதா பானர்ஜி. கிட்டத்தட்ட இதே முடிவைத்தான்  தயாநிதி மாறன் விஷயத்தில் கருணாநிதி எடுத்தார். அதனை பிரதமர் மன்மோகன் சிங் அப்படியே ஏற்றுக்கொண்டார். தற்போது மமதாவின் முறை.
என்ன செய்வது என்பது பற்றிப்பேச அவசரமாகக் கூடிப் பேசினர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்கள். இருப்பினும், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பிவிட்டார் என்றொரு செய்தி வெளியானது. அவருக்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸின் முகுல் ராயை ரயில்வே அமைச்சராக நியமிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் மமதா என்றும் தகவல் வெளியானது.
ஆனால், நான் இன்னமும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை; ரயில்வே பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இருக்கிறேன். அதேசமயம், மமதா பானர்ஜியோ அல்லது பிரதமரோ என்னைக் கேட்டுக் கொண்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொல்லியிருக்கிறார் திரிவேதி.
அநேகமாக மமதாவின் சொல்லுக்கு மத்திய அரசு கட்டுப்படும் என்றே தெரிகிறது. அதற்காக.  கட்டண உயர்வு திரும்பப்பெறப்படுமா என்பது சந்தேகம்தான். அதைச் சாதிக்கவேண்டும் என்றால் மமதா இன்னொரு அஸ்திரத்தை வீசவேண்டியிருக்கும்.
இன்னொரு பக்கம், திமுகவும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. திமுக மட்டுமல்ல; பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் கோரிக்கையும் அதுதான். ஆனால், மத்திய அரசின் சார்பில் எந்தவொரு உறுதிமொழியும் தரப்படவில்லை.
இலங்கை அரசை எதிர்க்காமல் இருப்பது  துரோகம் என்று விமரிசித்த கலைஞர் , ஒருவேளை மத்திய அரசு உரிய நிலைப்பாட்டை எடுக்காதபட்சத்தில் திமுகவின் செயற்குழு கூடிய உரிய முடிவெடுக்கும் என்று கூறியிருக்கிறார். திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சமீபகாலங்களில் மோதல் ஏற்படும் சமயங்களில் எல்லாம் உயர்நிலை செயல் திட்டக்குழுவைக் கூட்டி முடிவெடுப்பதாக அறிவிப்பது திமுகவின் வழக்கம். சொன்னபடியே கூடுவார்கள். பேசுவார்கள். ஆனால், எந்தவொரு முடிவையும் திட்டவட்டமாக எடுக்காமலேயே விட்டுவிடுவார்கள்.
ஆகவே, திமுகவின் மிரட்டலை இம்முறையும் காங்கிரஸ் கட்சி அலட்சியம் செய்துவிடும் என்றே தெரிகிறது. அதேசமயம், இலங்கை விவகாரத்தில் திமுகவின் இமேஜ் மீது விழுந்திருக்கும் கறையைத் துடைக்கக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆக, கூட்டணியின் முக்கியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸும் திமுகவும் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசைக் காப்பாற்ற இரண்டு திசைகளில் செயல்பட்டுவருகிறது காங்கிரஸ் கட்சி. ஒன்று, கூட்டணிக்கட்சிகளை சமாதானம் செய்வது. மற்றொன்று, இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக மேலும் சில கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவது.
திரிணாமுல் காங்கிரஸ், திமுக என்ற இரண்டு கட்சிகளுக்கும் சேர்ந்து மொத்தம் முப்பத்தியேழு எம்.பிக்கள் இருக்கின்றனர். இவர்களை இழந்துவிட்டு, புதிய கட்சிகளைத் திரட்டுவது என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமற்ற காரியம். ஆக, இப்போதைக்கு வெள்ளைக் கொடியைத் தூக்கவே காங்கிரஸ் விரும்பும் என்றே தெரிகிறது. பார்க்கலாம்!
- தமிழ்

கருத்துகள் இல்லை: