ஞாயிறு, 11 மார்ச், 2012

தி.மு.க.வாழ்த்து,!முலாயம்சிங்கை பிரதமராக்கும் முயற்சி நடக்கும்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தேசியவாத காங்கிரஸ்- தி.மு.க., போன்ற மாநில கட்சிகள் பலமாக கருதுகின்றன. வரும் பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க., அணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் அல்லது கூட்டணியிலிருந்து கழட்டிவிடும் வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலுக்கு முன் தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி சென்ற போது, அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தபோது, போட்டோ எடுக்க விடாமல், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் தடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
காங்கிரசுக்கு, 63 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் ராகுலின் பங்கு அதிகமாக இருந்தது என தி.மு.க., வினர் கருதினர். கடந்த முறை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போது சென்னைக்கு வந்த ராகுல், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என்ற ஆதங்கமும் தி.மு.க., வினர் மத்தியில் நிலவியது.
இந்நிலையில் உ.பி.,யில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம்சிங்கிற்கு மட்டும் வாழ்த்து செய்தி அனுப்பாமல், அவரது வாரிசும், மாநில தலைவருமான அகிலேஷ் யாதவுக்கும் வாழ்த்து செய்தியை கருணாநிதி அனுப்பி வைத்துள்ளார். உ.பி., மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அகிலேஷ்யாதவ் பாடுபடுகிறார் என்பதை தனது வாழ்த்து செய்தியின் மூலம் சூசகமாக கருணாநிதி தெரிவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை தமிழக காங்கிரசார் எழுப்பியுள்ளனர்.
மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் பாடுபடாத கட்சியை போலவும், ராகுலுக்கு நோஸ்கட் செய்யும் வகையில், அகிலேஷை பாராட்டி வாழ்த்து செய்தி அனுப்பியதாக தமிழக காங்கிரசார் கருதுகின்றனர். மத்திய அமைச்சரவைக்கு நெருக்கடி கொடுப்பதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டினால் தமது கை ஓங்கும் என, தி.மு.க., தலைமை கருதுகிறது. மேலும் வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., -காங்கிரஸ் கூட்டணி ஏற்படாத பட்சத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொகுதியில் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பும் உண்டு அல்லது காங்கிரசை கூட்டணியில் சேர்க்காமல் கழட்டி விடும் வாய்ப்பும் உண்டு என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முத்தாய்ப்பாக சமீபத்தில் தி.மு.க., தலைவரின் பெண் வாரிசு ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பெண் வாரிசு ஒருவரும் டில்லியில் சந்தித்து பேசும்போது, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த அடியை மாநில கட்சிகளுக்கு பலமாக கருதி கமென்ட் அடித்து பேசியுள்ளனர்.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத கட்சி பிரமுகர் ஒருவர் கூறியதாவது: அரசியலில் ஏழு ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வரும் ராகுலினால் மக்கள் ஈர்ப்பு தலைவராக முடியவில்லை. இந்திராவை போல பிரியங்கா வருவார் என்ற கணிப்பில், அவரை பிரசாரத்திற்கு அழைத்தும் வெற்றி பெற முடியவில்லை. தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு மட்டுமே காங்கிரசை கூட்டணியில் வைத்துக் கொள்ளலாம். மற்றப்படி அக்கட்சியை கூட்டணியில் சேர்ப்பதால் எந்த லாபமும் இல்லை என தி.மு.க., கருதுகிறது. அதனால் தான் ராகுலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில், அகிலேசுக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவிக்கிறார். பார்லிமென்ட் தேர்தல் முடிவுக்கு பின் பெரும்பான்மை காங்கிரசுக்கோ அல்லது பா.ஜ., வுக்கோ கிடைக்கவில்லை என்றால், முலாயம்சிங்கை பிரதமராக்கும் முயற்சி நடக்கும் போது, அவரை ஆதரிப்பதன் மூலம் மத்திய அமைச்சரவையில் கோலோச்சலாம் என்ற கணக்கையும் கருணாநிதி கணித்து வைத்துள்ளார். அதனால் தான் முலாயம்சிங்குக்கு இப்போதைக்கு வாழ்த்து சொல்லி துண்டை விரித்து வைத்துள்ளார். வரும் பார்லிமென்ட் தேர்தலில் ஆறு தொகுதிகளை தருவதாக காங்கிரசிடம் பேரம் பேசுவார். அதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், கூட்டணியிலிருந்து கழட்டி விடவும் அவர் தயங்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: