வியாழன், 15 மார்ச், 2012

தயாநிதிக்கு சம்மன் ஏர்செல் - மேக்ஸிஸ் டீல்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, ஏர்செல் - மேக்ஸிஸ் டீலிங்கிற்குப் பின், சன் குழுமத்தில் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்தது குறித்து நேரில் விளக்கம் அளிக்க (வரும் 20 ம் தேதி ) ஆஜராகுமாறு மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும் அவருடைய சகோதரர் கலாநிதிக்கு அமலாக்க துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த நெருக்கடியின் விளைவாக, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், ( 2006, மார்ச் மாதத்திற்கு பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின.

ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 600 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு என்ன காரணத்தினால் எந்த ரூபத்தில் நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக தேவையான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ,., மற்றும் அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த வழக்கில் தயாநிதி மற்றும் கலாநிதி ஆகிய இரண்டு பேரும் , வரும் 20 மற்றும் 21 ம் தேதிகளில் ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: