வெள்ளி, 16 மார்ச், 2012

லட்சக்கணக்கில் பெருகிய அலையாத்தி..!

ஒரு ஆராய்ச்சியும்... ஆச்சரியமும்...
கரு. முத்து
 
தமிழகத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சுனாமி தாக்குதலை அடுத்து... 'அலையாத்திக் காடுகளைப் பெருக்க வேண்டும்’ என்கிற கோரிக்கை வலுவாக எழுந்தது. இன்றுவரையிலும் அதை அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால், இந்த சுனாமி தாக்குதலுக்கு முன்பாகவே, இம்மரங்களின் அருமையை உணர்ந்த ஒரு தனிமனுஷி, சீர்காழி பகுதி கடற்கரையோர கிராமத்தில் ஆயிரக்கணக்கில் அலையாத்தி மரங்களை நட்டு வைக்க... அதன் அருமையை உணர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் அலி உசேன், அந்த மரங்களை தொடர்ந்து நடவு செய்ய... இன்று லட்சக்கணக்கில் பெருகி நின்று... அப்பகுதியையே அலையாத்தி வனமாக மாற்றி வைத்திருக்கின்றன அந்த மரங்கள்!
ஆங்கிலத்தில் 'மேங்ரோவ்' என்றழைக்கப்படும் அலையாத்தி மரங்கள், பல நூறு ஆண்டுகளாக நம் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தன. குறிப்பாக, தமிழக கடற்கரையோர கிராமங்கள் பலவற்றிலும் இவை தழைத்திருந்தன. ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட.... பிச்சாவரம், முத்துப்பேட்டை போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய பகுதிகளில்தான் தற்போது எஞ்சியிருக்கின்றன. இந்தப் பகுதிகள் மட்டும்தான் 'சுனாமி' தாக்குதலின்போது தப்பிப் பிழைத்தன என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த உண்மையை முன்கூட்டியே அறிந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி, தெய்வ. ஆஸ்டின் ஸ்டான்லி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேங்ரோவ் காடுகள் பற்றிய ஆய்வுப் படிப்புக்காக சீர்காழிப் பகுதிக்கு வந்தபோதுதான் அந்த மரங்களை நட்டுவைத்தார்.
கடற்கரை கிராமங்களில் ஒன்றான பெருந்தோட்டம் கிராமத்தில், அலி உசேனுக்கு சொந்தமான இறால் பண்ணையில், அவருடைய அனுமதியைப் பெற்று, இறால் குட்டைகளின் கரைகளில் மரங்களை நடவு செய்தார். பின்னர், தன்னுடைய வெவ்வேறு பணிகளில் கவனம் செலுத்தியவர், தற்போது இவர், ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த மேங்ரோவ் காடுகள் மேலாண்மை ஆலோசகராக பர்மாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்த ஸ்டான்லி, தான் நடவு செய்த அலையாத்தி மரங்கள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பெருந்தோட்டத்துக்கு வந்திருந்தார். அங்கே தற்போது லட்சக்கணக்கில் மரங்கள் பெருகியிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர், சந்தோஷ சங்கதியைப் பகிர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு வைத்தார். உடனடியாக புறப்பட்டு பெருந்தோட்டம் சென்ற நாமும், ஆச்சரியத்தில் மூழ்கினோம்!
''1995-ம் ஆண்டு சதுப்பு நிலக்காடுகளைப் பற்றி, குறிப்பாக... மேங்ரோவ் காடுகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன். அப்போது பிச்சாவரத்தில் இருந்து சில கன்றுகளை எடுத்து வந்து இங்கே நடவு செய்தேன். அதில் சில கன்றுகள் உயிர் பிழைத்தன. அந்த மண்ணில் அவை வளரும் என்பது தெரிந்ததும், தொடர்ந்து அந்தக் கன்றுகளை நடவு செய்ய ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட மூன்றாண்டுகளில் நூற்றுக்கணக்கான கன்றுகளை நடவு செய்தேன். அவற்றின் பலனைப் பார்த்துவிட்டு, அலி உசேனும் தொடர்ந்து நடவு செய்ய... தற்போது லட்சக்கணக்கில் மரங்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன. மொத்தம் ஆறுவகை மரங்கள் இங்குள்ளன.
பொதுவாக, இறால் பண்ணை அமைத்தால், சுற்றுச்சூழல் சீர் கெடும். நிலங்கள் வீணாகி விடும் என்பார்கள். 'அக்கருத்தை மாற்ற முடியுமா?’ என்று யோசித்துதான், இறால் பண்ணையில் ஆய்வை மேற்கொண்டேன். ஓராண்டிலேயே பலன்கள் தெரிய ஆரம்பித்தன. பொதுவாக, மழைக்காலங்களில் குட்டைகளின் கரைகள் கரைந்து, நீர் கசியத் தொடங்கும். ஆனால், மேங்ரோவ் மரக்கன்றுகள் வேர் பிடித்து வளர ஆரம்பித்த பிறகு கரைகள் உடையவில்லை. கசிவும் ஏற்படவில்லை.
குட்டைகளில் இருந்த அசுத்தங்களை மரங்கள் இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன. மரங்களின் நிழலில் இறால்களும் நன்கு வளர்ந்தன. பண்ணையில் உள்ள தண்ணீரை இக்குட்டைகளில் தேக்கி வைத்து, சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தோம்.
கடற்கரைகளில் இம்மரங்கள் இருந்தால்... கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கும் உதவுவதோடு... கடல் மாசுபடாமல், மீன்வளமும் பெருகுகிறது. இது என்னுடைய ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு'' என்று பெருமை பொங்கச் சொன்னார் ஆஸ்டின் ஸ்டான்லி.
தொடர்ந்த அலி உசேன், ''நாங்கள் கன்றுகளை நடவு செய்ய ஆரம்பித்தபோது பலரும், 'இது வீண் வேலை’ என்று சொன்னார்கள். ஆனால், எங்களது முறையான பராமரிப்பினால் இந்த 250 ஏக்கர் பண்ணையில் தற்போது ஒரு லட்சம் மேங்ரோவ் மரங்கள் உள்ளன. இதனால் கடலில் மீன்வளமும் பெருகியிருக்கிறது. இந்த மரங்களுடன் இறால் வளர்ப்பும் சேர்ந்து நடைபெறுவது இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான். இதற்காக இந்திய விவசாய கவுன்சில் எங்களுக்கு விருது கொடுத்திருக்கிறது. கொஞ்சம் அக்கறையோடு இம்மரங்களை வளர்த்து வருவதால்தான், இருபது வருடங்களாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் பண்ணையை நடத்தி வருகிறோம்.
ஆண்டுதோறும் பண்ணையின் கரைகளைப் பலப்படுத்த வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. மரங்கள் பெருகியிருப்பதால் பல வகையான பறவைகள் இங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றன. சுத்தமான காற்று கிடைக்கவும், இந்த மரங்கள் உதவுகின்றன'' என்று பெருமையோடு சொன்னார்.
thamks vikatan + paranthaman naidu  coimbatore

கருத்துகள் இல்லை: