வியாழன், 1 செப்டம்பர், 2011

கிறீஸ் மனிதர்கள் TNA நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொடர்பு என்கிறார் கருணா!

கிறீஸ் மர்ம மனிதர்கள் என்ற மர்ம செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பொய் பிரசாரம் காரணமாக மக்கள் தமது கையில் சட்டத்தை எடுத்துக்கொண்டு, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக முரளிதரன் கூறியுள்ளார்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர், கைதுசெய்யப்பட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் விடுவிக்க முடியாது எனவும் கிறீஸ் மர்ம மனிதர்கள் இருப்பதாக கூறினாலும் மக்கள் இந்த பொய் பிரசாரத்தின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என தேடிபார்க்கவில்லை எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: