வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஆசன வாயில் வைத்து இலங்கையிலிருந்து தங்கக் கட்டி கடத்திய பெண் கைது

தூத்துக்குடி: இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆசனவாயில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்த பெண்ணை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து ஒரு பெண் தங்க கட்டிகளை தூத்துக்குடிக்கு கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை கொழும்பில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த பயணிகள் கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவர் திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த சந்திரலிங்கம் மனைவி கோடீஸ்வரி என்பதும் அவருடன் வந்தவர் கொழும்புவை சேர்ந்த செல்வநாயகம் மனைவி பார்வதம் என்பதும் தெரிய வந்தது. இருவரின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் ஓன்றும் சிக்கவில்லை. இதையடுத்து கோடீஸ்வரியை பெண் அதிகாரிகள் மூலம் சோதனையிட்டனர். அப்போது ஆசன வாயில் அவர் 7 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே மூலம் சோதனை செய்தபோது அவரது உடலில் மேலும் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து அகற்றினர்.

தலா 116 கிராம் வீதம் மொத்தம் ஒரு கிலோ எடையுள்ள 276 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோடீஸ்வரியை அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பர்வதத்தை சோதனையிட்டதில் ஓன்றும் சிக்காததால் அவரை விடுவித்தனர். தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: