புதன், 31 ஆகஸ்ட், 2011

கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்த வழக்கு- 5 நிறுவன சொத்துக்கள் முடக்கம்

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது, கலைஞர் டிவிக்கு முறைகேடான வகையில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஐந்து நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

டைனமிக்ஸ் ரியால்டி, கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன், நிகார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், டி.பி.ரியால்டி ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் மற்றும் அசையாச் சொத்துகள் ஆகியவை முடக்கப்படவுள்ளன.

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி உரிமம் வழங்குவதற்காக அந்த நிறுவனத்தின் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வாவுக்குச் சொந்தமான டி.பி. ரியால்டி நிறுவனத்திடம் இருந்து ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணம் சினியுக் பிலிம்ஸ், குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகிய நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி எம்.பி., சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பணப் பரிவர்த்தனையில் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துகளை முடக்குவது பற்றி அமலாக்கப் பிரிவு திட்டமிட்டிருந்தது. சொத்துகளை அடையாளம் காணும் பணியும் நடந்து வந்தது.

இந்த நிலையில் 5 நிறுவனங்களின் சொத்துகளை முடக்குவதற்கு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. அன்னியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சொத்துகள் முடக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேசமயம், இதுதொடர்பாக எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

கருத்துகள் இல்லை: