செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சென்னை மாநகராட்சி மன்றத்தின் கடைசி கூட்டம்

சாதனையை மக்கள் அங்கீகரித்தால் அடுத்தமுறை வெற்றி பெறுவோம்


 சென்னை மாநகராட்சி மன்றத்தின் கடைசி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி தலைவர்கள் உருக்கமாக பேசினர். அது வருமாறு:
சைதை பி.ரவி ( எதிர்க்கட்சி தலைவர்): எதிர்க்கட்சி என்ற முறையில், ஆர்ப்பாட்டம் நடத்தி அல்லது வெளிநடப்பு செய்து எங்கள் கோரிக்கைகளை இந்த மன்றத்தில் வைக்காமல் மென்மையாக சொல்லி அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

ராமலிங்கம் (ஆளுங்கட்சி தலைவர்): புதிய தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதை கைவிட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயர் மா.சுப்பிரமணியன்: நாங்கள் புதிதாக பதவியேற்றபோது,

அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லாதநிலையில் மக்கள் குறையை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். உங்களை (பத்திரிகை) பிரதான எதிர்க்கட்சியாக கருதி, நீங்கள் எழுதும் குறைகளை சரி செய்வோம் என்றேன். அதேபோன்று தினமும் சென்னை சாலைகளில் ஏற்படும் பிரச்னை குறித்து பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

நான் அதை படிக்கும் முன்பே, அதிகாலை 5 மணிக்கெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் படித்து விட்டு எனக்கு போன் செய்வார்கள். நான் அதிகாரிகளிடம் சொல்லி அந்த பணிகளை உடனே சரி செய்வோம். பத்திரிகைகளிலும் மறுநாள் ‘பத்திரிகை செய்தி எதிரொலி‘ என்று வரும். அந்தளவுக்கு எதிர்க்கட்சியாக இருந்து செயல்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. அடுத்தமுறை வெற்றி பெற்று வருவோம் என்பது காலத்தின் முடிவு. நமது சாதனையை மக்கள் அங்கீகரித்து நம்மை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

பறந்து செல்கின்றோம் பிரிந்து செல்கின்றோம்

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் கடைசி கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு உறுப்பினரும் பேசும்போது, கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டனர். அதிகாரிகளும் மக்கள் பணிகள் விரைவாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக பாராட்டினர். இறுதியாக பேசிய பெண் உறுப்பினர் மாலினி ரமேஷ் கண்ணன் (காங்கிரஸ்) பேசும்போது, “பசுமை நிறைந்த நினைவுகளே, பாடி திரிந்த பறவைகளே, பழகி களித்த தோழர்களே, பறந்து செல்கின்றோம்... நாம் பிரிந்து செல்கின்றோம்...“ என்ற பாடல் வரியை நினைவு படுத்தினார். இதையடுத்து கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை: