வியாழன், 18 ஆகஸ்ட், 2011

நடிகை குட்டிபத்மினி கொடுத்த புகார் வாபஸ் மாஜி திமுக எம்.எல்.ஏ. மீது



தி.மு.க., முன்னாள் எம்.எல். ஏ., சிவாஜியிடமிருந்து நிலத்தை திருப்பி வழங்குமாறு போலீசிடம் கொடுத்த புகாரை, நடிகை குட்டிபத்மினி வாபஸ் பெற்றுள்ளார்.
திருவள்ளூர் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவாஜி மீது நடிகை குட்டி பத்மினி நில அபகரிப்பு புகார் கொடுத்தார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில்,

‘’கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் உள்ள ரூ. 5 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜி அபகரித்து விட்டார். அதை மீட்டு தாருங்கள்’’ என்று கூறியிருந்தார்.  

இது தொடர்பாக நடிகை குட்டி பத்மினி,

’’கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் கிராமத்தில் ராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து 5 ஏக்கர் நிலத்தை எனது பெயரிலும், எனது 3 மகள்கள் பெயரிலும் வாங்கினேன். கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாக தற்போது அந்த இடம் மிகப்பெரிய பழத்தோட்டமாக மாறியுள்ளது.

200 மா மரங்கள், 300 தென்னை மரங்கள், பலா, சப்போட்டா மரங்களும் உள்ளன. மரங்களை வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் விலை உயர்ந்த மரக்கன்றுகளுடன்தான் சென்னை திரும்புவேன். இப்படி பார்த்து பார்த்து பழத்தோட்டத்தை உருவாக்கினேன்.
இந்நிலையில் டி.வி. தொடர் ஒன்றுக்காக எனக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது.

இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜியிடம் ரூ. 3.5 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கு முறையாக வட்டியும் செலுத்தி வந்தேன்.

திடீரென ஒருநாள் சிவாஜி என்னிடம் வந்து நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியோடு சேர்த்து ரூ. 4.5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு எனக்கு நெருக்கடி கொடுத்தார். உடனடியாக என்னால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியவில்லை.  

இதனால் 5 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் நிலத்தை மட்டும் அவருக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால் சிவாஜி, மீதியுள்ள 4 ஏக்கரையும் அபகரித்துக் கொண்டார். பழத்தோட்டத்தினுள் பெரிய வீடு ஒன்றையும் கட்டினார் இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் சென்று, நீங்கள் செய்வது சரியா? என்று கேட்டேன். நீங்கள் வாங்கிய கடனுக்கு எல்லாம் சரியாகி விட்டது. இந்த இடத்தை கேட்டு தொந்தரவு செய்தால் கை கால்களை எடுத்து விடுவேன். யாரும் உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டினார்.

இதனால் பயந்து போன நான் இதுபற்றி அப்போது புகார் எதுவும் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு சொந்தமான சொத்தை அவர் அனுபவித்து வருகிறார்.  

அந்த இடத்தில் முதியோர் இல்லத்தை கட்டி, அங்கேயே நானும் தங்கி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. அந்த சொத்துக்கான ஒரிஜினல் பத்திரம், பட்டா எல்லாம் இன்னும் என்னிடம்தான் இருக்கிறது. எனவே சிவாஜியிடமிருந்து எனது இடத்தை மீட்காமல் விடமாட்டேன்’’ கூறியிருந்தார்.  

இதனிடையே, திருவள்ளூர் நில தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் முன்னிலையில், 2 ஏக்கர் நிலத்தை ரூ. 24 லட்சத்திற்கு கிரையம் செய்த பின், அவர் புகாரை வாபஸ் பெற்றார்.
1994ம் ஆண்டில், 1 ஏக்கர் நிலத்தை, சிவாஜியிடம் அடமானமாக வழங்கிய நடிகை குட்டி பத்மினி, தற்போது தனது 5 ஏக்கர் நிலத்தையும் சிவாஜி அபகரித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தனது மகள் கீர்த்தனா பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை ரூ. 24 லட்சம் மதிப்பிற்கு கிரையம் செய்தார்.

கருத்துகள் இல்லை: