வியாழன், 18 ஆகஸ்ட், 2011

மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்-டாக்டர் ராமதாஸ் திராவிடக் கட்சிகளுடன்

சென்னை: கடந்த காலத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை டாக்டர் ராமதாஸ் நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
மக்களின் வாழ்வா தாரத்தைப் பெருக்கும் திட்டங்களைத்தான் அரசு வழங்க வேண்டுமே ஒழிய, இலவசங்கள் வழங்கக்கூடாது. கல்வியையும், சுகாதாரத்தையும்தான் இலவசமாக வழங்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இலவசத் திட்டங்களுக்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இப்போதைய அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் இலவச திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 44 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழர்களின் மொழி, கலாசாரத்தை அவர்கள் சீரழித்துவிட்டனர்.

திராவிடக் கட்சிகளை மாற்றி,மாற்றி ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். திராவிடக் கட்சிகளை அகற்றுவதே பாமகவின் கொள்கை.
தமிழக பள்ளிகளில் சிபிஎஸ்இ கல்வி முறையை ஒழிக்க வேண்டும். கட்டாய தமிழ் வழி கல்வி முறை கொண்டு வர வேண்டும். அதேவேளையில், மாணவர்கள் நன்றாக ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் பயிற்றுவிக்க வேண்டும்.
மதுக்கடைகளை மூட வேண்டும். இதை வலியுறுத்தி கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, நானே தலைமை தாங்கி நடத்துவேன். மதுபானங்கள் விற்பனை 2002-03 ஆம் ஆண்டில் 2 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றார் ராமதாஸ்.
லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடுவார்
பாமகவின் குடும்ப அரசியல் குறித்து பொன்முடி கூறியுள்ளாரே என்ற கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ராமதாஸ்,

வரும் மக்களைவைத் தேர்தலில் அன்புமணி போட்டியிடுவார். நான் எந்தப் பதவியும் வகிக்கவில்லை. அதைப்போல அன்புமணியும் எந்தப் பதவியும் வேண்டாம் என்றுதான் இருந்தார். கட்சியினரின் வற்புறுத்தலால்தான் அமைச்சரானார். எனவே குடும்ப அரசியலால் வந்தவர் என்று சொல்ல முடியாது. அவர் அமைச்சராவதற்கான முழு தகுதியுடன் உள்ளவர் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: