வியாழன், 18 ஆகஸ்ட், 2011

தமிழ்க் கட்சிகள் புதுடில்லி பயணம்

இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு தமிழ்க் கட்சிகளை புதுடில்லிக்கு வரும்படி இந்தியா அழைத்துள்ளது. இச் சந்திப்பு எதிர்வரும் 23ம், 24ம் திகதிகளில் புதுடில்லியில் இடம்பெறும்.
இலங்கை அரசுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு முன்பாகத் தமிழ்க் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தக் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் உலக அபிவிருத்திக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் ஒன்றியம் எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் பிரநிதிகளை கலந்துகொள்ளுமாறு அமைப்பின் தலைவரான இந்திய காங்கிரஸ் கட்சி எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
முதல்நாள் அமர்வில் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறியப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சியினருக்கும் இணக்கப்பாடான பொதுக்கருத்து நிலையொன்றை ஏற்படுத்தப்படும். இரண்டாம் நாள் அமர்வில் புதுடில்லியில்உள்ள முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்களை தமிழ்க் கட்சியினர்  சந்திப்பார்களெனவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை: