வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அன்னாவின் போராட்டம் பலன் தராது, நியாயமற்றது-நந்தன் நிலகேனி

டெல்லி: அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் ஊழலுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டம் நியாயமற்றது, பலன் தராது, இந்தப் போராட்டத்தால் ஊழலை ஒழித்து விட முடியாது என்று முன்னாள் இன்போசிஸ் தலைமை செயலதிகாரியும், அடையாள அட்டைத் திட்ட தலைவருமான நந்தன் நிலகேனி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஊழலை ஒழிக்க தற்போது அன்னா ஹஸாரே தலைமையில் நடந்து வரும் போராட்டம் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை. இந்தப் போராட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியாது. லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலுக்கு எதிரான பல்வேறு ஆயுதங்களில் ஒன்றாக அது இருக்க முடியுமே தவிர அதனால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று வாதிடுவது அர்த்தமற்றது.
படிப்படியாக திட்டமிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே ஊழலை ஒழிக்க முடியுமே தவிர இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம் ஒழிக்க முடியும் என நான் நினைக்கவில்லை.
ஊழலை ஒரே அடியாக அடித்து வீழ்த்தும் தோட்டவாக நான் லோக்பால் மசோதாவைப் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கவும் முடியாது. சட்டம் போட்டு ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறுவது சரியல்ல.
அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே குழுவினர் கூறும் ஜன் லோக்பால் மசோதாவும் சரி, ஊழலை ஒழிக்கும் ஒரே ஆயுதம் அல்ல. இந்த சட்டம் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று நினைப்பது கற்பனைக்கு சரி வருமே தவிர நிஜத்தில் சாத்தியமில்லாதது.

சமூக அளவில் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மக்களின் வேதனைகள், விரக்திகள், கோபங்களை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அதேசமயம், புற்றுநோயாக மாறியுள்ள ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் போதுமானது என்று கருதுவது தவறானது. ஊழிலை ஒழிக்க மிகப் பெரிய அளவிலான நடவடிக்கைகள் நமக்குத் தேவைப்படுகிறது. பல நடவடிக்ககளை நாம் எடுக்க வேண்டியுளள்ளது. அதில் ஒரு நடவடிக்கையாக மட்டுமே லோக்பால் இருக்க முடியும்.

லோக்பால் மசோதா தேவையில்லை என்று நான் சொல்ல வரவில்லை. அதுவும் தேவை. அதேசமயம், அது மட்டும் போதாது, அதனால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது என்பதுதான் எனது குறித்து. ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளாமல் நாம் சட்டம் தேவை என்று கூறுவது அர்த்தமற்றது.
பொது சேவைகளில் நிலவும் முறைகேடுகள், ஊழல்களை நாம் களைய வேண்டும். படிப்படியாக ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக ஊழலை ஒழிக்க முடியும். அதற்கு சட்டம் மட்டும் போதாது.
ரேஷன் கடைகளுக்குப் போனால் அங்கு ஊழல். பென்ஷன் பணத்தை வாங்க லஞ்சம். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் மாறிப் போகும்போது வங்கிக் கணக்கை மாற்றவோ, கேஸ் இணைப்பை மாற்றவோ முயலும்போது அங்கும் லஞ்சம். மின் இணைப்பு பெற லஞ்சம், வேலையில் சேர லஞ்சம். இப்படி பல மட்டங்களில், அடி மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும்.
எனவே ஒரே ஒரு சட்டம் எல்லா ஊழலையும், லஞ்சத்தையும் ஒழித்து விடும் என்ற நம்பிக்கை தவறானது, அர்த்தமற்றது என்றார் நிலகேனி.

கருத்துகள் இல்லை: