சனி, 20 ஆகஸ்ட், 2011

அமெரிக்க விமானப்படையுடன் இலங்கை விமானப்படை கூட்டுப்பயிற்சி

இலங்கையில் நடைபெறும் விமானப்படை கூட்டுப் பயிற்சியொன்றில் அமெரிக்க விமானப்படையுடன் இணைந்து தான் பங்குபற்றவுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க விமானப்படை விமானங்கள் இலங்கை வான்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இரு வாரங்களுக்குள் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டுப் பயிற்சியானது அமெரிக் விமானப்படையின் பசுபிக் கட்டளைப் பிரிவின் சிந்தனையில் உதித்தாகும் என என இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹார்ஷா அபேவிக்கிரம தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய விமானப்படை, மலேஷிய விமானப்படை, பங்களாதேஷ் விமானப்படை ஆகியனவும் இப்பயிற்சிகளில் பங்குபற்றவுள்ளன.
பிராந்திய நாடுகளுடனான இடைத்தொடர்புகளை மேம்படுத்தவும் பிராந்திய நாடுகளின் விமானப்படைகளுக்கு சர்வதேச அனுபவங்களை பெற்றுக்கொடுக்கவும் உலகெங்கும் இத்தகைய பல்நாட்டு கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இரத்மலானை, அம்பாறையிலுள்ள விமானப்படைத் தளங்களில் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.  பல்வேறு வகையான பரசூட்கள் மூலம், பல்வேறு பொருட்களை விமானத்திலிருந்து தரையிறக்குதல் போன்ற பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன.
இராணுவ மோதல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின்போது மனிதாபிமான உதவிகளை வழங்குதல், இயற்கை அனர்த்தங்களை வினைத்திறனுடன் கையாள்வதற்கு ஏற்ப இந்தோ-பசுபிக் நாடுகளின் விமானப்படை ஆற்றல்களை விருத்தி செய்தல் ஆகியனவே இப்பயிற்சிகளின் பிரதான இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: