புதன், 17 ஆகஸ்ட், 2011

4 நாள் தங்கிய கொள்ளையர் ப.சிதம்பரம் பங்களாவில் ரூ.52 லட்சம் வெள்ளி திருட்டு

காரைக்குடி அருகே மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்களாவில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ வெள்ளி பாத்திரங்கள் திருடு போயுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக கொள்ளையர்கள் 4 நாட்கள் பங்களாவில் தங்கியது தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனு£ர் மோதிலால் தெருவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உறவினர்களின் பொது வீடு உள்ளது. இந்த பங்களாவில் 12 அறைகளின் ஐன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது நேற்று முன்தினம் தெரியவந்தது. வீட்டின் பங்குதாரர்கள் கும்பகோணம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று காரைக்குடி வந்தனர்.

அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் பங்களாவில் இருந்த ரூ.52 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ வெள்ளி பாத்திரங்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கொள்ளை தொடர்பாக 3 குற்றவாளிகளின் கைரேகைகள் சிக்கியுள்ளன. குறைந்தது 4 நாட்கள் இந்த பங்களாவில் தங்கி கொள்ளையடித்துள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள்“ என்றார்.

கருத்துகள் இல்லை: