புதன், 17 ஆகஸ்ட், 2011

காந்தி அழகிரி சீறல் பேட்டி சரண்டர், சமாதானம் என்பது எல்லாம் என் கணவரின் சரித்திரத்திலேயே இல்லாதது.

'மதுரை மீட்பு’ நடவடிக்கைகளில் ஜெயலலிதாவின் கிடுக்கிப் பிடி நாளுக்கு நாள் வலுக்கிறது. மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி நின்றவர்கள் வரிசையாகக் கைது செய்யப்பட... அடுத்த கைது, காந்தி அழகிரிதான் என காச்மூச் கிளம்பி விட்டது. இதற்கிடையில் கைது நடவடிக்கைக்குப் பயந்து அழகிரியின் குடும்பத்தார் வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டதாகவும் பரபரப்பு. 'பரபர செய்திச் சுரங்கமாக’ அழகிரியின் குடும்பம் மாறிவிட்ட நிலையில், ஜூ.வி-க்கு காந்தி அழகிரி அளித்த பிரத்யேகப் பேட்டி...

''கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியை தி.மு.க. சந்திக்கும் என எதிர்பார்த்​​தீர்களா?''
''இல்லை!
ஆனாலும், மக்களின் தீர்ப்பைத் தலை வணங்கி ஏற்கும் பக்குவமும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், தோற்று விட்டதை நினைத்து வருத்தப்படும் நிலையில் நாங்கள் இல்லை!''
''ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது வழக்கமானதுதான். ஆனால், 'மதுரை மீட்பு’ என அறிவித்து அதிரடி கிளப்புகிற அளவுக்கு மதுரையை நோக்கி ஜெ. ஆவேசம் காட்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''தேர்தலுக்கு முன்னரே மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் எனது கணவர் பெயரையும், அவருடைய நண்பர்கள் பெயர்களையும் பட்டியல் போட்டு பழிக்குப் பழி வாங்குவேன் என ஆவேசமாக முழங்கினார் அந்த அம்மையார். அதைத்தான் இப்போது செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார். கட்சிக்கும் என் கணவருக்கும் நெருக்கமான ஆட்களைச் சிறையில் தள்ளுவதன் மூலமாக, தான் நினைத்ததைச் சாதித்துவிட முடியும் என்பது அவருடைய நம்பிக்கை. கைதுகளை அரங்கேற்றுவதும், குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுவதும் மதுரையின் வழக்கமான காட்சிகளாகத் தொடர்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளையும் ஆக்கப்பூர்வத் திட்டங்களையும் எதிர்பார்த்துதான் மக்கள் ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அவற்றைப் பரிபூரணமாகச் செய்யவேண்டியவர்கள், இப்படிப் பழிவாங்கும் போக்கையே முதன்மையான வேலையாகச் செய்கிறார்கள். செய்யட்டும்... இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்!''

''பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி என அரசியலுக்கு உட்பட்டவர்கள் மட்டும் அல்லாது, உங்களை நோக்கியும் போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமாகிறதே..?''
''விசுவாசிகளைச் சிறையில் தள்ளுவதன் மூலமாக, என் கணவரைத் தனிமைப்படுத்தி சங்கடத்தில் ஆழ்த்தலாம் என்பது அவர்களின் கனவு. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஒரு குடும்பத் தலைவியான என்னை நோக்கியும் போலீஸை ஏவி விடுகிறார்கள். இதன் மூலமாக என் கணவரை நிலைகுலைய வைக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அதற்காகப் பொய்யான ஜோடிப்புகளைச் செய்து, அடாவடி, மோசடி என என்னென்னவோ கிளப்பி விடுகிறார்கள். பொய் வழக்குகளைப் போடச் சொல்லி, போலீஸைத் தூண்டிவிடுகிறார்கள்''
''இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் உங்கள் கணவரை எத்தகைய மன நிலையில் வைத்திருக்கின்றன?''
''எப்போதுமே அவர் எதையும் எதிர்கொள்ளும் மன நிலையில்தான் இருப்பார். ஆட்சி மாறினால் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார். எதிர்பார்த்ததையும் தாண்டி அடக்குமுறை நடவடிக்கைகள் இப்போது தீவிரமாக நடக்கின்றன. கைதுக் களேபரங்களை அரங்கேற்றினால், கட்சியையும் என் கணவரையும் அழித்துவிடலாம் என அந்த அம்மையார் நினைப்பது தவறு. எத்தனையோ சூறாவளிகளையும் போராட்டங்களையும் கடந்து வந்தவர்தான் என் கணவர். அம்மையாரின் அடக்குமுறைகள் எங்கள் கட்சியை இன்னும் வளர்க்கவே செய்யும். கடைக்கோடித் தொண்டன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் படிக்கல்லாக மாறும். இந்த அம்மையார் நடத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பார்த்து கட்சிக்குள் இருந்த சிறுசிறு பூசல்களைக்கூட மறந்துவிட்டு, அனைவரும் ஒருமித்துக் கைகோத்து நிற்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா... வெற்றி, மகிழ்ச்சி என சாதகங்கள் மட்டுமே நிலவும் நேரத்தைக் காட்டிலும், இந்த மாதிரியான இக்கட்டான சூழலில்தான் என் கணவர் படு ஆக்டிவாகவும், 'வரட்டும் பார்க்கலாம்’ என்கிற வைராக்கியத்துடனும் இருப்பார். அவருடைய ஆதரவாளர்கள் கைதான உடனேயே முதல் ஆளாகப் போய்ப் பார்த்தார். 'நான் இருக்கேன். தைரியமா இருங்க’ எனச் சொன்னார். பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தைரிய மன நிலையில்தான் அவர் இருக்கிறார்!''
''நிலம் வாங்கிய விவகாரத்தில் உங்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதே... உண்மையில் அந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது?''
''ஒரு பாமரனுக்கும் தெரிந்த விஷயத்தைக் கேட்கிறேன்... ஒரு சொத்தை வாங்கும்போது, அதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதைத்தானே பார்த்து வாங்குவோம். நாங்கள் வாங்கிய சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை. விற்பவர்களின் முழு ஒப்புதல், முறையான விலை, உரிய ஆவணங்கள் எனப் பத்திரப் பதிவுக்குப் பின்பற்றக்கூடிய அனைத்தையும் முறையாகக் கடைப்​பிடித்தே அந்த நிலத்தை வாங்கினோம். அதில், திடீரென இப்போது எங்கே இருந்து வில்லங்கம் வந்தது?
எங்கள் மீது புகார் கொடுத்த விவசாயி ஒருவரே போலீஸ் ஸ்டேஷனைத் தேடி வந்து, 'சிலருடைய தூண்டுதலால் புகார் கொடுத்துவிட்டேன். இப்போது புகாரை வாபஸ் பெற விரும்புகிறேன்!’ எனச் சொல்கிறார். புகார் கொடுத்தவரே பின்வாங்கிய நிலையிலும், போலீஸ் நடவடிக்கைகள் தீவிரம் ஆகிறது என்றால், இது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கைதானே!
நாங்கள் சொத்துக்களை வளைத்து​விட்டதாகப் பரப்பியவர்கள், புகார் கொடுத்​தவரே எங்களுக்கு ஆதரவாகப் பேசுவதை கண்டுகொள்வது இல்லை!''
''கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்குப் பறந்து ​விட்டதாகப் பரபரப்பான பேச்சு அடிபட்டதே?''

''வெளிநாடுகளுக்குப் போவது தவறு என்கிற சட்டம், எனக்குத் தெரிந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. இப்போது புதிதாக யாரும் அப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்களோ என்னவோ? இப்போதும் எப்போதும் நாங்கள் இங்கேதான் இருப்போம். எங்கேயும் பறக்க மாட்டோம். எங்களுக்கு எதிராக ஏதாவது நடக்காதா எனப் பறப்பவர்கள்தான், இப்படிப் பரப்புகிறார்கள். இதை எல்லாம் எங்கள் மீதான அக்கறையாக எடுத்துக்கொண்டு, சிரிக்கவே செய்கிறோம்!''
''கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து, ஜெயலலிதாவுடன் உங்கள் கணவர் சமாதானம் பேசியதாகக்கூட செய்தி பரவியதே?''
''சரியான கட்டுக்கதை அது! எதிர்க் கட்சியினரோடு சரண்டர், சமாதானம் என்பது எல்லாம் என் கணவரின் சரித்திரத்திலேயே இல்லாதது. ஜெயலலிதாவுடன் சமாதானம் என்பது எப்போதுமே கிடையாது... நெவர்!''

''இதை எல்லாம் மீறி, உங்களின் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால், அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?''
''சட்டப்படி, நீதிமன்றத்தில் தைரியமாக எதிர்கொள்வேன். கைதுக்கோ, சிறைக்கோ அஞ்சாத தைரியத்தை, அவரைக் கரம் பிடித்த நாளில் இருந்தே கற்றுவைத்து இருக்கும் ஆள் நான். அவருடைய நான்கு எழுத்துக்களே என் நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் போதுமானது... ஆமாம்!''
''உங்கள் கணவருக்கும் ஸ்டாலினுக்கும் மறுபடியும் மனக் கசப்புத் தொடங்கி விட்டதா என்ன?''
''என்றுமே இணைந்திருக்கும் சகோதரர்கள் அவர்கள். அவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படாதா என ஏங்குபவர்கள் கிளப்பி விடும் வழக்கமான வதந்தி அது. புரியாமல்தான் கேட்கிறேன்... இதே வதந்தியை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிளப்புவாங்களோ... ஏதாவது கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பா!''

கருத்துகள் இல்லை: