வெள்ளி, 1 ஜூலை, 2011

Sai Trust ஆந்திர அரசு ஏற்காது- சலுகைகள் தொடரும்

சாய் அறக்கட்டளையை ஆந்திர அரசு ஏற்காது- சலுகைகள் தொடரும்

ஹைதராபாத்: சாய்பாபா அறக்கட்டளையை ஏற்று நடத்தும் எண்ணமே இல்லை என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும், அறக்கட்டளைக்கு அரசு அளித்து வரும் சலுகைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

சாய்பாபா அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. சாய்பாபா உயிருடன் இருக்கும் வரை அறக்கட்டளை எந்தவித பிரச்சனையும் இன்றி நடந்தது. ஆனால் அவர் மறைவுக்கு பிறகு அறக்கட்டளை பிரச்சனை மயமாக உள்ளது. இதனால் சாய் அறக்கட்டளையை ஆந்திர அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் அன்மையில் போலீசார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 35 லட்சத்தை கைபற்றினர். அறக்கட்டளை உறுப்பினர்களோ அது சாய்பாபாவுக்கு மகா சமாதி கட்ட கொடுத்த பணம் என்றனர். ஆனால் பக்தர்கள் நம்பவில்லை. அவர்களுக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் சாய்பாபா அறக்கட்டளையை ஏற்று நடத்தும் எண்ணமே இல்லை என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சாய்பாபா அறக்கட்டளையை அரசு ஏற்று நடத்தாது. அறக்கட்டளைக்கு பணமாகவும், நகையாகவும் ஏராளமான பக்தர்கள் நன்கொடை அளிக்கின்றனர். இதனால் தற்போது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, சொத்து மற்றும் நிதி விபரங்களை அறிக்கையாக சமர்பிக்குமாறு அறக்கட்டளையை கேட்டுக் கொண்டுள்ளோம். அவ்வாறு பெறப்படும் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறக்கட்டளைக்கு உத்தரவிடப்படும்.

சாய்பாபா இருந்தபோது அறக்கட்டளை தொடர்பாக எந்தவித சந்தேகமோ, புகாரோ எழவில்லை. ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அறக்கட்டளை செயல்பாடுகளில் வெளிப்படையான தன்மையை உறுபடுத்த தான் இந்த விஷயத்தில் அரசு தலையிட முடிவு செய்தது.

அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சலுகை விலையில் மின்சாரம், குடி தண்ணீர் போன்றவை வழங்கப்படுகிறது. சொத்து வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் இனியும் தொடரும்.

திருப்பதி தேவஸ்தானத்தில் இருப்பது போன்று சாய்பாபா அறக்கட்டளைக்கும் ஒரு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது. ஆனால், கண்காணிப்புக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: