வெள்ளி, 1 ஜூலை, 2011

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக யாரிருந்தாலும் கடும் நடவடிக்கை"


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணரமுடிகிறது. ஆயுதத்துடன் நடமாடுபவர்கள் யாராகவிருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நான் கட்டளையிடுகின்றேன் என கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகமாகவுள்ள திமிலைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வங்கிக்கொள்ளையானது வெறுமனே சாதாரணமான ஒரு விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக கொள்ளைகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு காரணம் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்துகொண்டு சிலர் ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாகும். இந்த ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பில் எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றினை நாங்கள் தேடியளிப்போம் என அவர் எச்சரித்துள்ளார்.

நிச்சயம் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட ஐந்துபேரையும் தண்டிப்போம் எனவும் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெக்ஸ் பெரேரா தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பு திமிலைதீவு மக்கள் வங்கியில் இடம்பெற்ற கொள்ளையினை தொடர்ந்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான வங்கி முகாமையாளர்களையும் மட்டக்களப்பில் உள்ள முன்னாள் ஆயுதக்குழுக்களாக இருந்து அரசியல் கட்சியாக உள்ளவர்ளையும் இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடாந்து கருத்து தெரிவிக்கையில்,

"ஊடகங்களுக்கு தெளிவாகக் கூறுகின்றேன். இந்த நாட்டில் ஆயுதம் வைத்திருக்கக்கூடியவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரே. வேறு எவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால் அவர்கள் யாராகவிருந்தாலும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் தேடுதல்களையும் சுற்றிவளைப்புக்களையும் வீதித்தடைகளையும் ஏற்படுத்த வேண்டியேற்படும். இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படும். இவற்றை எவராலும் தடுக்கமுடியாது. எந்த அரசியல் கட்சியாகவிருந்தாலும் சரி அவர்கள் எவராக இருந்தாலும் சரி யார் பிள்ளையாக இருந்தாலும் சரி பரவாயில்லை. நாம் நடவடிக்கையெடுப்போம். இங்கு சொல்லப்படும் சொல்லுக்கும் நான் பொறுப்பெடுக்கின்றேன்.

ஆரம்பத்தில் ஐந்து இயக்கங்களிடம் ஆயுதங்கள் இருந்தன. பின்னர் அவர்களில் விடுதலைப் புலிகள் தவிர ஏனையவர்கள் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்தனர். இறுதியில் விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் பயங்கரவாதத்துக்கு இடம் கிடையாது. அபிவிருத்திக்கும் சுதந்திரத்துக்கும்தான் இடமுண்டு.

மனதில் உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு சமாதானத்துக்கானவர்கள் போல் நடிக்கமுடியாது. அவ்வாறு நடிப்பவர்களை எமக்கு தெரியும். எமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனைபவர்களை தேடி அழித்தே ஆகுவோம்.

அபிருத்திக்கோ, சமாதானத்துக்கோ குந்தகம் விளைவிக்கும் சம்பவம் இருந்தால் அதுபற்றி அறிவிக்கவேண்டும். அறிவிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

24 மணி நேரமும் நாங்கள் பாதுகாப்பிற்காக கஷ்டப்படுகின்றோம். ஆனால் ஆயுதம் தரித்த ஐந்து பத்துப்பேர் அவற்றினை சீர்குலைத்துவருகின்றனர்.

நான் பொலநறுவை உட்பட கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு பாதுகாப்பிற்கு பொறுப்பாகவுள்ளேன். இந்த மாவட்டங்களில் மட்டக்களப்பிலேயே அதிக கொள்ளை, கொலை, கப்பம் கோருதல் என்பன இடம்பெற்றது. மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களாக இருந்தவர்கள் வியாபாரிகளிடம் கப்பம் பெற்றுக்கொண்டு சொகுசாக வாழ்ந்துவந்தார்கள்.

அந்த நிலை குறைந்திருந்தாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக வன்முறைச் சம்பங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து சில அரசியல் கட்சிகளின் பின்புலம் தொடர்பிலும் தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன.

திமிலைதீவில் இடம்பெற்ற இந்த வங்கிக் கொள்ளையானது அந்த வங்கியிலே இடம்பெறவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இடம்பெறாமையும் ஒரு காரணம் என நான் அறிகின்றேன்.

ஏற்கனவே களுவாஞ்சிகுடியிலும் இவ்வாறான வங்கிக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களை பிடித்ததுடன், ஒருவரை பிடிப்பதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். பிடித்தவர்களிடம் இருந்து 30 இலட்சம் ரூபா பணத்தினையும் மீட்டுள்ளோம்.

இதேபோன்று தான் இந்தக் கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களையும் நாங்கள் விரைவில் பிடிப்போம். அந்த ஐவரையும் தண்டிப்போம்.

வங்கி முகாமையாளர்கள் வங்கி பாதுகாப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளையும் பலப்படுத்த வேண்டும். அனைத்து வங்கிகளுக்கும் இன்றிலிருந்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேலாக இராணுவத்தினரின் பாதுகாப்பை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படும்போது அதனை தெரியப்படுத்துவதற்கான தந்திரோபாயங்களை வங்கியில் மேற்கொள்ளவேண்டும். அவற்றில் அபாய ஒலிகளை எழுப்பக்கூடிய சமிக்ஞைகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும்.

அதனை முகாமையாளர் தாம் இருந்தவாரே எவருக்கும் தெரியாதவாறு எழுப்புவதற்கான ஒழுங்கிணை செய்யவேண்டும். அந்த அபாய ஒலியானது வங்கியின் சுற்றுப்புறத்தில் நூறு மீற்றருக்காவது கேட்கக்கூடியவாறு அமையவேண்டும்.

இன்றில் இருந்து வங்கிக்குள் எந்த வாகனமும் உட்செல்ல அனுமதிக்ககூடாது. வங்கி முகாமையாளர் உட்பட பாதுகாப்பு தரப்பினரின் வாகனங்களும் உட்செல்லமுடியாது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.

வங்கிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பாதுகாப்பு கமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் வங்கியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அருகில் இருக்கும் வீட்டு உரிமையாளர்களுடன் உறவுகளைப்பேண வேண்டும். அவர்களை மாதம் ஒரு முறையாவது அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாக பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும்.

வங்கிகள் தங்களது பாதுகாப்புக்களை தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களது பாதுகாப்பு ஊழியர்களைக் கொண்டே பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டும். பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்.

இந்த கலந்துரையாடலுக்கு நேரத்துக்கு சமூகம் தராத வங்கி அதிகாரிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கி உயர் அதிகாரிகளுக்கு அறிவிப்பேன். இங்கு கலந்துரையாடப்படும் விடயம் வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பான விடயம். இவற்றுக்கு உரிய நேரத்துக்கு சமூகமளிக்காதவர்கள் வங்கிகளின் பாதுகாப்பில் எவ்வாறு அக்கரைகொள்வர், எனவும் கேள்வியெழுப்பினார்.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு தரப்பினர் சார்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் கட்டளைத்தளபதி பிரிக்கேடியர் மகிந்த முதலிகே, மட்டக்களப்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் கரவிட்ட மற்றும் படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈரோஸ், டெலோ, புளோட், ஈ.பி.டி.பி.ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: