செவ்வாய், 28 ஜூன், 2011

ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் பத்மினி

"முழு மூச்சுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!' :

ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் பத்மினி: என் அப்பா, வங்கி அதிகாரி; அம்மா, பள்ளி ஆசிரியர். படிப்பிற்காக, சொந்த ஊரான சேலத்தில் இருந்து, சென்னைக்கு வந்தேன். பி.காம்., முடித்தவுடன் திருமணம். கணவர்,போக்குவரத்து துறையில் பணிபுரிகிறார். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.குழந்தைகள் பள்ளி சென்ற பின், அதிக நேரம் கிடைத்தது. தொழில் துறை ஏதேனும் ஒன்றில் சாதிக்க விரும்பினேன். என் ஆசையை புரிந்து கொண்ட கணவர் உற்சாகம் அளிக்க, சார்ட்டட் அக்கவுன்ட் கோர்சை முடித்தேன். பின், பல நிறுவனங்களின் கணக்குகளை நிர்வகித்தேன்.ஒரு நாள், என் உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏவியேஷன் துறை சவாலாக இருக்கும் என்பது தெரிந்தது. சென்னையில், நான்கு நிறுவனங்கள் மட்டுமே இத்தொழில் செய்து வருவதால், இந்த தொழிலில் அவருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டேன்.துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். ஓரு கட்டத்தில், வாங்கிய ஹெலிகாப்டர்களை விற்று விடலாம் என்ற நிலை வந்தது. ஆனால், வேறு சில தொழில்களின் மூலம் வந்த வருமானத்தையெல்லாம், இதில் முதலீடு செய்தேன்.தற்போது, என் நிறுவனத்தில், ஐந்து ஹெலிகாப்டர்கள் உள்ளன. இன்னும், குட்டி விமானங்கள் வாங்குவதுடன், புதுச்சேரியில் ஒரு ஹெலிபேட் அமைக்கும் திட்டமும் உள்ளது.எங்கள் ஹெலிபேடை, வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி, பிசினஸ் மேன்கள், வி.ஐ.பி.,க்கள் என பலரும், இந்தியாவின் பல நகரங்களுக்கு சென்று வரவும், சினிமா மற்றும் விளம்பர படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.இந்த நிறுவனத்தின் முலம், ஆண்டிற்கு மூன்று கோடி வரை வருமானம் வருகிறது. எவ்வளவு கோடி முதலீட்டில் தொழில் துவங்கினாலும், முழு மூச்சோடு, கடுமையாக உழைத்தால், தரையிலும் சரி, வானத்திலும் சரி, பெண்கள் கொடிக்கட்டிப் பறக்கலாம்.

கருத்துகள் இல்லை: