சனி, 2 ஜூலை, 2011

50 ஆயிரம் கோடி நகைகள்,ஒரு அறையில் மட்டும். மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறையில் ஒரு அறையில் இருந்த பொருட்களின் மதிப்பு ஸி50 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது. இதனால் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, கோயிலைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள பாதாள அறைகளை திறந்து அங்குள்ள நகைகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் நியமித்த 7 பேர் குழு நகைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் முதலில் சி முதல் எப் வரையிலான அறைகள் திறக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், ஆபரணங்கள், பொருட்கள் போன்றவை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 136 வருடங்கள் திறக்கப்படாமல் இருந்த ஏ மற்றும் பி ஆகிய அறைகளில் ஏ அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த அறை இரண்டரை மீட்டர் நீளமும், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. இதன் உயரம் ஒன்றரை மீட்டர் மட்டுமே. இதனால் அறையில் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்ட பின்னரே நகைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

உள்ளே ஒரு பெரிய மரப்பெட்டி இருந்தது. பல ஆண்டுகளாகிவிட்டதால் அந்த நகை பெட்டி சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் அதிலிருந்த நகைகள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவை சிதறி கிடந்தன. அந்த அறையின் ஒரு மூலையில் தங்க கட்டி, தங்க கயிறு, நெல்மணி அளவிலான தங்க குண்டுமணிகள், ரத்தினங்கள், நூற்றுக்கணக்கான தங்க செயின்கள், தங்க கம்பிகள் ஆகியவை இருந்தன.

இவை தவிர தங்க நாணயங்கள் குவிந்து கிடந்தன. தங்க நாணயங்கள் ஒவ்வொன்றும் 50 பைசா அளவில் இருந்தது. இது தவிர பழைய ஒரு பைசா நாணயம் அளவிற்கும் ஏராளமான தங்க நாணயங்கள் காணப்பட்டன. 18 அடி நீளம் கொண்ட இரண்டரை கிலோ எடை கொண்ட 4 ராட்சத தங்க செயின்கள் இருந்தன. ஒரு சாக்கு நிறைய பெல்ஜியம் ரத்தினங்கள் இருந்தது. இவற்றின் மதிப்பு என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.

தங்க செயின்களில் வைரங்கள், மாணிக்கம், மரகதம் ஆகியவை பொறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரை நடந்த பின்னரும் நகைகள் கணக்கெடுப்பு பணி முடியவில்லை. இந்த ஒரு அறையில் இருந்த நகைகளின் மதிப்பு மட்டுமே ஸி50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறைகளில் உள்ள நகைகள் கணக்கெடுப்பு பணி முடிந்த பின்னரே பி அறை திறக்கப்படும். இந்த அறையிலும் அறை ஏ&யில் காணப்பட்டது போல் விலை மதிப்பு மிக்க தங்கம், வைரம், ரத்தினங்கள் ஏராளமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பத்மநாப சுவாமி கோயிலில் தோண்ட தோண்ட கிடைத்து வரும் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டிவிட்டதால் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து இக்கோயிலைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதாள அறை இன்று திறப்பு

பத்மநாப சுவாமி கோயிலில் ஏ முதல் எப் வரை 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் ஏற்கனவே 4 அறைகள் திறக்கப்பட்டன. இவற்றில் ஸி1000 கோடி மதிப்புள்ள நகைகள் குறிப்பாக கோயிலில் பயன்படுத்தப்படும் ஆபரணங்கள் கிடைத்தன. நேற்று மேலும் ஒரு ரகசிய அறை திறக்கப்பட்டது. இதில் ஸி50 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் இருந்தன. இவை குவியலாகவும் மூட்டை மூட்டையாகவும் கொட்டிக் கிடந்தன. இன்று மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதிலும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கிடைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரளா ராஜாக்கள் எவ்வளவு மக்களை சுரண்டி உள்ளார்கள் என்பது மிகவும் தெளிவாகிறது. உலக சரித்திரத்தில் இந்த இந்திய ராஜாக்களை போன்ற கொள்ளைக்காரர்கள் வேறு எங்கும் இல்லை என்றே சொல்லாம். இந்த வரிசையில் ராஜராஜ சோழனையும் சேர்க்கலாம். ஆயிரம் கோடி செலவழித்தாலும் தஞ்சை கோவிலை கட்டமுடியாது. எப்படி அவரால் கட்ட முடிந்தது? எல்லாம் கொள்ளைதான்? 

கருத்துகள் இல்லை: