செவ்வாய், 28 ஜூன், 2011

சாலமன் பாப்பையாவின் ஹிந்தி ஆதரவு பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி


 மதுரையில்  டாக்டர் கு. கண்ணன் எழுதி தொகுத்த திருக்குறள் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உரைகள் தொகுப்பு) நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சாலமன்பாப்பையா பங்கேற்று  வாழ்த்துரை வழங்கினார்.அப்போது அவர், தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று வந்துள்ளனர். அவற்றையே, தமிழகத்தில் கிடைக்கும் அரிய சொத்தாகவும் அவர்கள் கருதி வந்தனர்.

ஆனால், தமிழகத்துக்கு வந்த வீரமாமுனிவர் மட்டுமே, திருக்குறளை லத்தீன் மொழிக்கு எடுத்துச் சென்றார்.

அதன்பிறகே, தமிழகத்தில் அரிய சொத்தாக திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பதை, வெளிநாட்டறிஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

அதன்பிறகுதான், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 35-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழை ஹிந்தி அழித்துவிடும் என நடந்த பிரச்சாரத்தால், தமிழகத்தில் ஹிந்தி கற்பது தடைபட்டது.
ஹிந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை அழித்து வருகிறது.

ஹிந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில் மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கியிருக்க முடியும். ஹிந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.

தற்போது திருக்குறள் உரை நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஹிந்தி உரையைப் புகுத்தி இருப்பது சிறப்பாகும்’’ என்று தெரிவித்தார்.

இந்தி எதிர்ப்பு பிரச்சாரம்தான் திமுகவின் அடித்தளம்.  இப்படியிருக்க திமுகவின் அபிமானி பேராசிரியர் சாலமன் பாப்பையா இப்படி பேசியிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

பாப்பையாவின் ஹிந்தி ஆதரவு

கருத்துகள் இல்லை: