செவ்வாய், 28 ஜூன், 2011

ரூம் போட்டு யோசிக்கும் ஜெ.Jayalalitha கருணாநிதி போல குழப்பியடிக்க ஆரம்பித்துள்ளார்.

‘தேர்தலுக்கு முன்பு மத்திய காங்கிரஸ் அரசுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகச் சொன்னது அப்போதைய நிலைபாடு. இப்போது நிலைமை அப்படியே மாறி விட்டது. இப்போ ஆதரவெல்லாம் தர முடியாது’ என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஜெ!
‘அனைத்துக் கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்’ – இது பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கான பதில்!
வரவர ஜெ.வும் கேட்ட கேள்விக்கு தனது வழக்கமான நேரடியான பதிலைத் தராமல் கருணாநிதி போல குழப்பியடிக்க ஆரம்பித்துள்ளார். அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்கள் உண்டு என்றால், திமுகவில் யார் யார் நண்பர்கள் என்று கேட்க வேண்டும். ஒருவேளை கருணாநிதியாக இருக்குமோ?

ப.சிதம்பரம் மேல் திடீரென ஜெ.விற்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டதோ தெரியவில்லை. “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெறவேயில்லை.மோசடி செய்து வென்றதாக அறிவிக்கச் செய்துள்ளார். நாட்டையே ஏமாற்றி விட்டார்” என்று மீண்டும் சிதம்பரம் மேல் பாய்ந்திருக்கிறார். ஜெ. டிவி செய்திகளில் முந்தைய ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்று சொல்லிக் கொண்டேயிருந்ததைப் போல, “மோசடி ப.சி.” என்று சொல்ல ஆரம்பிப்பார்களா தெரியவில்லை!

முதல்வர் ஆன பிறகு முதல் முறையாக தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மூன்று நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜெ., அங்கே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி ஆக்‌ஷன் எடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாராம். அதன்படியே அனைத்து மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குறைகள் கறையப்பட்டுள்ளனவாம். ஸ்ரீரங்கம் செல்வதற்கு முன் ‘முதல்வன்’ திரைப்படத்தைப் பார்த்து விட்டு சென்றிருப்பாரோ?!

போன ‘மைனாரிட்டி’ திமுக ஆட்சியின் போது அரைகுறையாக முடிக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் தூசி தட்டப்படுகின்றன. ஒவ்வொன்றாக இனி மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பல பெருந்தலைகள் வரிசையாக ‘உள்ளே’ செல்லப்போவது நிச்சயம் என்கிறார்கள் விஷயமறிந்த வட்டாரத்தினர்!
O
ஒவ்வொரு நாளும் நாளிதழை எடுத்தால் ‘இன்றைய மின்வெட்டு’ செய்திக்கு அடுத்தபடியாக ‘இன்றைய கும்மாங்குத்து’ என்ற தலைப்பில் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாறி மாறி பந்தாடப்படும் செய்திகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. ‘மாற்றமே மனித தத்துவம்’ என்பது உண்மை தான் என்றாலும் இப்படியா தினந்தோறும் அதை நிரூபித்துக் கொண்டிருப்பது?
லேட்டஸ்டாக 7 அமைச்சர்களுக்கு இலாகாக்களையே மாற்றியிருக்கிறார் ஜெ!
மரியம் பிச்சை மறைந்ததினால், இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., முகம்மது ஜானுக்கு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை வழங்கப்பட்டிருக்கிறது!
சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு போக, வர இரு வழிகளிலும் போக்குவரத்து கட்டணத்தில் 50 சதம் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
வர வர கல்லூரி, பள்ளி மாணவர்களைக் குறி வைத்தே இலவசங்களும், சலுகைகளும் அதிகமாக தரப்படுவதைப் பார்த்தால், ஜெ. முழுக்க முழுக்க வரும் தேர்தல்களில் இளைஞர்கள் ஓட்டை ஒட்டு மொத்தமாக அள்ளி விடலாம் என்று ரூம் போட்டு யொசித்து திட்டம் தீட்டுவதைப் போலத் தான் இருக்கிறது!

ஆதரவற்றோர், முதியோருக்கான உதவித் தொகை மாதம் ஐநூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தபடி அறிவித்திருக்கிறார் ஜெ. இதனை அடுத்து தமிழகம் முழுவதிலும் மேற்படி உதவித்தொகைக்காக 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைக் குவித்துள்ளனர். ஐநூறு ரூபாய் அதிகரித்ததற்கே ஆதரவற்றோரும், முதியோரும் 20 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர் என்றால், தப்பித்தவறி இரண்டாயிரம் ரூபாயாக ஆக்கியிருந்தால் தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் ஆதரவற்றோர், முதியோர் என்று விண்ணப்பித்திருந்திருப்பார்களோ?!

கருத்துகள் இல்லை: