ஞாயிறு, 26 ஜூன், 2011

தேர்தலுக்குப் பின் தி.மு.க.,வின் முதல் போராட்ட அறிவிப்பு வெளியாகிறது

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், முதன் முறையாக, தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் வரும் 23 மற்றும் 24ம் தேதி, கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், அ.தி.மு.க., அரசிற்கு எதிரான போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலின்போது தி.மு.க., உட்கட்சி பூசல் காரணமாக, பலர் கட்சிக்கு எதிராக வேலை செய்தனர். அவர்களின் செயல்கள் குறித்து புகார் செய்ய கட்சியினர் தயாராகினர். கட்சி தலைமை யாரையும் சந்திக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்ந்து பதவியிலிருப்பதும், அவர்களை கட்டுப்படுத்த கட்சித் தலைமையால் முடியாததும், தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது. இதனால் கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே, கட்சியை தொடர்ந்து உயிரோட்டத்துடன் வைத்திருக்க முடியும் என்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தலைவர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். கனிமொழி கைதை தடுக்க காங்கிரஸ் உதவவில்லை. தொல்லைகளைத் தரும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அவசியமா, என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. கட்சித் தலைமையோ, கனிமொழி சிறையிலிருக்கும் நிலையில், மத்திய அமைச்சரவையிலிருந்து விலக விரும்பவில்லை.

சமீபத்தில் நடந்த தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை கண்டித்து தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து மட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க, மாவட்டம்தோறும் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. உயர்நிலை செயல் திட்டக்குழு முடிவின்படி, கடந்த 20ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் பேசுவோர், காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கக் கூடாது என கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று பேச்சாளர்கள் அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகளை மட்டும் கண்டித்து பேசி வருகின்றனர்.

இச்சூழலில் வரும் 2ம் தேதி சென்னையில், தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இளைஞர் அணியினர் சிறப்பாக செயல்படாததால், தேர்தலில் இளைஞர்கள் ஓட்டுகளைப் பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது குறித்து விவாதிப்பதுடன், இளைஞர் அணி சார்பில், ஆளும் கட்சி செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. ஜூலை மாதம் 23 மற்றும் 24ம் தேதி கோயம்புத்தூரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இடம் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பாலும் பொதுக்குழுக் கூட்டம் ஒரு நாள் நடைபெறும். இம்முறை அனைவருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்பதற்காகவும், அனைவரையும் சமாதானப்படுத்தி கட்சி வளர்ச்சியை தீவிரப்படுத்தவும், இரண்டு நாட்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் சமச்சீர் கல்வி ரத்து, தலைமைச் செயலகம் இடமாற்றம் என அ.தி.மு.க., அரசு எடுத்த முடிவுகளை கண்டித்து, போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, போராட்டங்களை அறிவிக்க தலைமை முடிவு செய்துள்ளது. கட்சி பலவீனமாக உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக, அங்கு பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: